13 October 2012

திரும்பி வந்த சிங்கம்

லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வருடமாகிறது.

கடந்த ஒரு வருடத்தில் வந்த இதழ்களின் ஒரு கழுகுப் பார்வை இதோ :

டிசம்பர் - 2011 -ல் புத்தகக் காட்சியில் வெளியான இதழ் இது. முதல் முறை பெரிய சைஸில்; வண்ணத்தில் வந்த இதழ். பார்க்க மற்றும் படிக்க நன்றாக இருந்தாலும், தொடர்ந்து இது போல இதழ்களை மாதம் ஒரு முறை லயன் காமிக்ஸ் நிர்வாகியால் வெளியிட முடியுமா என்ற ஒரு கேள்வி மனதில் நிலவியது.


அந்த சந்தேகத்தைப் பொய்யாக்கி அடுத்தடுத்து சொன்ன தேதிக்கு காமிக்ஸ்கள் வர ஆரம்பித்தன.


வழக்கமாக கார்டூன் மற்றும் கௌபாய் கதைகளே லயன் மற்றும் முத்துகாமிக்ஸை ஆக்கிரமித்திருந்த சமயம் வந்த இதழ் “என் பெயர் லார்கோ”. படித்த உடன் மிகவும் பிடித்துப்போன கதாநாயகர்களுள் ஒருவராக லார்கோ மாறிப்போனார். சித்திரங்களா ? இல்லை போட்டோவா என்று ஒன்றுக்கு இருமுறைப் பார்க்கவைக்கும் அளவுக்கு அற்புதமாக வண்ணச் சித்திரங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களே தோல்வியடையும் வகையில் பிரம்மிக்க வைக்கும் கதைசொல்லும் திறன் என்று மிகப் பெரிய மாறுதலை தமிழ் காமிக்ஸ் உலகில் இந்த இதழ் கொண்டுவந்தது.

சற்றே ஏறக்குறைய 30-40 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு கதை, இன்று படித்தாலும் ரசிக்கவைக்கும் வகையில் இருக்குமா ? என்ற கேள்வியினைத் தகர்ந்தெறியும் கார்டூன் ஹீரோ - லக்கி லூக். நகைச்சுவையை கதைகளில் கொண்டுவருவது அதுவும் படிக்கும் போது வாய்விட்டு சிரிக்கவைப்பது என்பது மிக மிகக் கடினமான ஒரு விஷயம். ஆனால் இந்த இதழில் வந்த வண்ணமயமான இரண்டு கதைகளும் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இருந்தது.

ரிப்போர்டர் ஜானி என்ற கதாநாயகனின் கதைகள் பெல்ஜியம் நாட்டில் மிகவும்  பிரபலமான ஒன்று. சிக்கலான துப்பறியும் கதைகள். ஒவ்வொரு இதழும் 5 லட்சங்கள் விற்பனையாகும். அந்தக் கதைகளை வண்ணத்தில், தமிழில் படிக்க இந்த புத்தகம் உதவியது.

இந்த வருடத்தில் வந்த கதைகளில் மிகச் சிறந்தது இந்த இரண்டு கதைகள். ஒன்று மிகவும் சாமன்யமான ஒரு கௌபாயின் வாழ்வில் நடக்கும் கதை. மற்றொன்று கௌபாய் கதைகளில் மிகவும் பிரபலமான கேப்டன் ப்ளூபெரி (தமிழில் கேப்டன் டைகர்). சித்திரங்கள், மனதை கனக்கச் செய்யும் கதையமைப்பு என்று இரண்டு கதைகளும் சூப்பர் ஹிட் ரகம். காமிக்ஸ் பற்றி பெரிய ஆர்வம் இல்லாதவர்களும் இந்த இரண்டு கதைகளைப் படித்தால் உடனடியாக ரசிகராக மாற்றும் வல்லமைப் படைத்தக் கதைகள் இவை. இந்தக் கதைகளைப் பற்றிய மிகச் சிறந்த விமர்சனங்கள் இதோ :





இளம்பிராயத்தில் படித்த இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மற்றும் இரும்பு மனிதன் ஆர்ச்சி என்ற மூன்று கதாநாயகர்கள் தோன்றும் கருப்பு - வெள்ளை இதழ் இது.


கேப்டன் டைகரின் மெகா ஹிட் கதை மறுபதிப்பாக முழு வண்ணத்தின் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது - தங்கக்கல்லறை.

மேலே குறிப்பிட்டிருந்தக் கதைகளில் பல ஆங்கிலத்தில் கிடைக்கிறது. ஒவ்வொரு கதையின் விலை ரூ 250 - ரூ 500. அந்த வகையில் தமிழில் ரூ 100 விலையில் வெளியாகும் இந்தக் கதைகள் ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். சென்னையில் டிஸ்கவரி பேலஸ் மற்றும் ebay-ல் கிடைக்கிறது.

லயன் காமிக்ஸ் பற்றி மேலும் அறிய மற்றும் வாங்க இந்தத் தளத்தைப் பாருங்கள். லயன் - முத்துகாமிக்ஸ்

2012 வருடம் போலவே 2013ஆம் வருடமும் பல தரம் உயர்ந்த காமிக்ஸ்கள் வெளிவரும் நம்பிக்கையிருக்கிறது.

26 August 2012

தேசாந்திரியிலிருந்து சில துளிகள்


மீள் பதிவு:

இன்று காலையில் எழுந்த போதே சென்னை மேக மூட்டத்துடன் ரம்யமாக இருந்தது. சோம்பலுடன், ஜன்னலை திறந்த உடன் முகத்தில் பட்ட சில்லென்ற காற்று உற்சாகத்தை தந்தது. இந்த வானிலையில் பயணம் மேற்கொள்வது இனிய அனுபவமாக இருக்கும். ஆனால் சோம்பல், வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்காத போது, பயணத்தின் இனிமையை அனுபவிக்க ஒரே வழி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தேசாந்திரி. ஜன்னல் வழியே வழிந்த சிறிய வெளிச்சத்தில், மெத்தென்ற படுக்கையில், அமைதியான சூழ்நிலையில் புத்தகத்தில் மூழ்கினேன். பல முறை படித்திருந்த போதும், ஒவ்வொருமுறை படிக்கும் போது பயணத்தின் சுகானுபவம். இவருக்கு மட்டும் வித்தியாசமான கண்கள். சாதாரணமான விஷயங்களை இவர் எழுத்தின் வழியே படிக்கும் போது, “அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என வியப்பாக இருக்கிறது. இவரின் பல புத்தகங்களை படித்திருந்தாலும், தேசாந்திரி - என் மனதுக்கு நெருக்கமான புத்தகம். புதியதாக இந்த புத்தகத்தை படிக்க விழைபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சப்தங்கள் மிக குறைந்த, இடையூறுகள் இல்லாத நேரத்தில், அமைதியான மன நிலையில் படியுங்கள்.

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது, தேசாந்திரி புத்தகத்தின் சில துளிகள்..அதுவும் தேன் துளிகள். ரசித்தவற்றை எழுதவேண்டுமென்றால், புத்தகம் முழுவதையும் எழுதவேண்டும்.பலர் பல பதிவுகளில் இப்புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தாலும், எனக்கு பிடித்த சில வரிகள் இவை.

இனி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விழி வழியே இவ்வுலகம். 
------------- 
2 - சாரநாத்தில் ஒரு நாள்
இந்தச் சாலைகள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது!

-------------
4 - லோனாவாலாவில் பார்த்த மழை
மழை பெய்யத் துவங்கியதும் மனித சுபாவம் மாறத் துவங்கிவிடுகிறது. யாரும் குரலை உயர்த்திப் பேசிக்கொள்வதிலை. மாறாக, மழை பெய்யும்போது யார் யாரைப் பார்த்தாலும், முகத்தில் மெல்லிய சிரிப்பு கரை தட்டி நிற்பதை உணர முடிகிறது. மழை ஒரு தியானத்தைப் போல மெள்ள நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது.

------------
5 - பாடப் புத்தகங்களுக்கு வெளியே...!
சரித்திரம் நம் உடையில், உணவில், பேச்சில், அன்றாட நடவடிக்கைகளில் தினமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் அணியும் சட்டையில் உள்ள பொத்தான்கள், பெர்சீயாவில் இருந்து வந்ததையும், நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு வெள்ளைக்காரர்கள் நமக்கு அறிமுகம் செய்தது என்பதையும் நாம் சரித்திரம் என்று உணர்வதில்லை.

லண்டனில் ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். ஆனால், பாரதியார் பிறந்த இடத்தை எத்தனை பேர் நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள் ?

--------
6 - கண்ணால் வரைந்த கோடு
மலையின் மீது நடக்கத் துவங்கியதும் நகரம் நம் காலடியில் நழுவிப்போகத் துவங்குகிறது. உயரம் ஒரு அதிசயம் என்பதை, மனது மெல்ல உணரத் துவங்குகிறது. தரையில் இருந்து காணும் பொருட்கள், ஏன் உயரத்துக்குப் போனதும் இத்தனை ஆச்சர்யமாக மாறிவிடுகின்றன என்று வியப்பாக இருக்கிறது.
(தினமும் என் அலுவலகத்தின் ஜன்னல் வெளியே தெரியும் புனித தாமஸ் மலை (செயின்ட் தாமஸ் மவுண்டை) இவர் பார்வையில் பார்க்கும் போது, 20 வருடங்களாக சென்னையிலிருந்தும் இந்த இடத்தை பார்க்கவில்லையென வெட்கமாக இருக்கிறது)

---------
7 - நிலமெங்கும் பூக்கள்
பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்.... எத்தனைவிதமான மலர்கள்...! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் !.

---------
10 - அருவியாடல்
குற்றாலம் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே அருவியின் சப்தமும், ஈர வாடையும், குரங்குகளும் நினைவில் எழுந்துவிடுகின்றன.

அருவியைப் பார்த்துச் சிரிக்காதவ்ர் எவரும் இருக்கிறார்களா என்ன ? அருவியின் முன்னே வயது கலைந்து போய்விடுகிறது. அருவியின் முன்னே நம் பேச்சுக்கள் யாவும் ஒடுங்கிவிடுகின்றன. அருவி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.

--------
15 - அறிந்த ஊர்
பின்னிரவில் எல்லா ஊர்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அதிலும் பேருந்து நிலையங்களும் அதைச் சுற்றிலும் உள்ள சிறு கடைகளில் எரியும் டியூப் லைட்டுகள் மற்றும் பாதி உறக்கம் பீடித்த பெட்டிக்கடைகள், காலியான நாற்காலிகளுடன் பால் கொதிக்கும் டீக்கடைகள், உறக்கத்தின் பிடியில் சுருண்டுகிடக்கும் வயதானவர்கள், கால்கள் மட்டும் வெளியே தெரிய உறங்கும் ஆட்டோக்காரர்கள்.

--------
25 - ஒரு கோயில்.. சில காட்சிகள்!
முன்பு எல்லா ஊர்களின் ரயில் நிலையத்தின் முன்பாகவும், குதிரை வண்டிக்காரர்கள் நிற்பார்கள். வண்டிக்குள் வைக்கோல் பரப்பி, அதன் மீது சமுக்காளம் விரித்திருப்பார்கள். குதிரை வண்டிகளின் இடத்தை இன்று ஆட்டோக்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.

--------
35- ஒளிரும் எண்கள்
கும்பகோணதில் உள்ள கணித மேதை ராமனுஜத்தின் நினைவு இல்லத்தில் குனிந்து செல்ல வேண்டிய அளவு தாழ்வான கூரை அமைப்பு. வீட்டில் யாரும் இல்லை. ராமானுஜத்தின் மூச்சுக் காற்றும் விரல் ரேகைகளும் மட்டுமே மீதம் இருக்கின்றன. இந்த அறையில் ராமானுஜம் படித்துக்கொண்டு இருந்திருப்பார் என்கிற காட்சி மனதில் கடந்து போனது.


--------
36 - உறங்கும் கடல்
தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன.

--------
41 - நோக்கும் திசையெல்லாம்
பின்வாங்கியோடும் அலையைப் போல இரவு, தன் இருப்பிடம் திரும்பத் துவங்கி இருந்தது. உலகில் ஒவ்வொரு நாளும் இதே போலத்தான் இரவு விடைபெறுகிறது. சில நிமிடங்களில் வெளிச்சம் உலகின் மீது தன் நிறத்தைத் தீட்டத் துவங்கியது. பனி படர்ந்த இமயமலை கண்ணில் படத் துவங்கியது. இதே சூரியனைத்தான் இத்தனை வருடங்களாகக் காண்கிறேனா ? ஏன் இந்தப் பிரமாண்டம், வசீகரம் என் ஜன்னலைத் திறந்து பார்க்கும் போது கிடைக்கவே இல்லை. எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும், இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்.

 -----------
புத்தகம்     : தேசாந்திரி
வெளியீடு: ஆனந்தவிகடன்
விலை       :ரூபாய் 110.
நன்றி(படங்களுக்காக): examiner.com,ramasundaram.sulekha.com,bloggersbase.com,moxhafinearts.com,pacificbulbsociety.org

15 August 2012

October Sky (அக்டோபர் ஸ்கை)

ஒரு சினிமாவைப் பார்த்தவுடன் பிடித்துப் போக அந்த சினிமாவில் எதோ நாம் முன்பு பார்த்த அல்லது பார்க்காத, ஆனால் பிடித்த விஷயம் இருக்கவேண்டும். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், சிலருக்கு தன்னம்பிக்கையும் கொடுத்தால் அந்த சினிமாக்கள் காலத்தை வென்றவையாக க்ளாசிக் வரிசையில் இடம் பிடிக்கிறது. அந்த வரிசையில், நான் பார்த்து ரசித்த படம் இது.

October Sky - 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம். மிகவும் எளிமையான கதை. 1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன், ஸ்புட்னிக் என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தியது. அந்த செய்தி கேட்ட பிறகு, பலருக்கு (சிறுவர்களுக்கு) வானவியலில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவில்   உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு சிறிய ராக்கெட் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்ற பெரிய ஆர்வம். அவனது அப்பா, அந்த கிராமத்திலிருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களில் ஒருவர். வழக்கம் போல தன் மகனின் இந்த ஆசையை பெரிதாக விரும்பாதவர்.

ராக்கெட் மேல் அவன் கொண்ட ஆர்வத்தை பலர் கேலி செய்ய, சில நண்பர்களுடன் சேர்ந்து அவன் எப்படி ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கிறான் என்பதே கதை.

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த விஷயங்கள்:

1957 ஆம் வருடம் நடக்கும் கதை. ஒரு நிலக்கரி சுரங்கள்; அதனையொட்டி இருக்கும் சிறு குடியிருப்பு என நம்மை 1957ஆம் வருடத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு சின்ன அறிவியல் விஷயத்தை நிஜமாக்க அவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்.

சிறிது சிறிதாக அவர்கள் செய்யும் ஆராய்ச்சிகள்; அவர்கள் தயாரிக்கும் முதல் ராக்கெட்டுக்கும், படத்தின் இறுதியில் வரும் ராக்கெட்டுக்கும் இடையில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி.

அவர்கள் அதைச் செய்ய தரும் விலை; யாரெல்லாம் அவனுக்கு உதவுகிறார்கள்; நேரிடும் தடங்கல்கள் என்ன ?;

விளையாட்டாய் அவர்கள் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டால் ஏற்படும் விளைவுகள்;  சோகங்கள், சிரிப்புகள், சந்தோஷ தருணங்கள் ; தன்னம்பிக்கைகள்  என இந்தப் படம் கற்றுத்தரும் பாடம் நிறைய.

சிறியவர்களும், பெரியவர்களும், அறிவியலில் ஆர்வம் கொண்டவர்களும், தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல சோர்வில்லாமல் தன் கனவுகளைத் தேடிச் சொல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது.