17 July 2010

சில சுவாரஸ்யங்கள் - களவாணி

திரைப்படம் வெற்றியடைய கதை மிக முக்கியமானது என்ற பொதுவான கருத்தை பல படங்கள் பொய்யாக்கியிருக்கிறது. அப்பாவைக் கொன்ற வில்லன்களைக் கொல்லும் மகன் - ’அபூர்வ சகோதரர்கள்’. எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணைக் காதலிக்க விரும்பும் இளைஞர்கள் - ’இன்று போய் நாளை வா'. இந்த வரிசையில் பருத்திவீரன் கதையை கொஞ்சம் சிரிப்புடன் சொல்லியிருக்கும் - களவாணி.

இனி புதிதாக சொல்ல எந்தக் கதையும் உலகில் இல்லை. அதனால் புதிய கதை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டு, திரைக்கதையில் வித்தியாசத்தைக் காட்டி நிறைய தமிழ் படங்கள் வெற்றியடைவது நல்லது.

சில படங்கள் மட்டுமே பார்த்த உடன், அடுத்த நாளே மறுமுறை பார்த்திருக்கிறேன். நாயகன், சின்னத்தாயி, கதாநாயகன், ஆட்டோகிராஃப் மற்றும் பசங்க. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தாராளமாக சேர்க்கலாம்.


சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படம் முழுவதும் இருக்கிறது.


படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில், ”கட்டிக்கிறேன்னு சொல்லு” என்று கதாநாயகன் அந்த சின்ன பெண்ணிடம் வற்புறுத்தும் போது, சிணுங்கிக்கொண்டே சொல்லும் அந்தப் பெண்ணின் முகபாவனை.

நொந்து போய் உட்கார்ந்திருக்கும் இளவரசுவிடம், ”ஏய்யா ! வெளிநாட்டுல இருந்து வந்திருக்கன்னு சொன்னாங்க. நல்லாயிருக்கியா ?. என்ன கோடாலி தைலமா கொண்டு வந்த ?” என்று ஒரு கிழவி கேட்க, அப்பொழுது அவரது முகபாவனை.

டிராஃபிக் கான்ஸ்டபிளிடமே, கிரிக்கெட் பந்தயத்திற்கு நன்கொடை வசூலிப்பது.

பாஸ்போர்ட் எடுக்க மகன் பணம் கேட்க, அப்பா தர மறுக்க, சரண்யா “சரிடா, இந்த தாலி 7 பவுன். அத அடகு வெச்சு பணம் வாங்கிக்க” என்று சொல்லும் போது, பதைபதைப்புடன் “வேண்டாண்டி. கொண்டு போய் வித்துடுவாண்டி” என்று புலம்பும் இளவரசு.


அண்ணே ! குடத்துல தண்ணி கொண்டு வந்து கை வலிக்குது” என்று சொல்லும் தங்கையிடம், “எங்க போற ? போ ! போ ! நாலு குடத்த கொண்டு வந்து வெயிட்டிங்ல போடு” என்று அலட்சியமாக சொல்லும் கதாநாயகன்.

பிரைவேட்ல வெச்சுருக்குற நகைய எடுத்து சொசைட்டியில வெச்சுடணும். ஒரு நல்ல நேரம் வந்து கடன தள்ளுபடி பண்ணிட்டா நல்லாயிருக்கும்” என்று மாடு வண்டியில் அமர்ந்து வரும் அந்த பெண்கள் பேசுவது.

செல்போனில் சிக்னல் சரியாக கிடைக்காததால், கதாநாயகன் மாட்டு வண்டியை விட்டு இறங்க, மாடு வயல்வெளியை நோக்கி போக, அடுத்த முறை செல்போனில் கால் வரும் போது, ”ஏண்டி மறுபடியும் குதிச்சுடப் போறாண்டி... அய்யயோ, குதிச்சுட்டாண்டி” என்று மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்கள் அலறுவது.


உங்க வீட்டு விசேஷத்துல எல்லாம் வந்து வேலை செஞ்சுருக்கேன். என் வீட்டு விசேஷத்துல நல்லா வேலை செய்யுங்க” என்று சரண்யா, தன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருப்பவர்களிடம் சொல்வது.

இத்தனை பேர் நிக்கிறோமே, யார்கிட்ட வந்து நிக்குறா பார்த்தீங்களா” என்று, கதாநாயகி சரண்யாவிடம் வந்து நிற்கும் போது கூட்டதிலிருக்கும் பெண்கள் சொல்வது.

எனக்கு சேலையா எடுத்துக் குடுத்த ?” என்று கேட்கும் கிழவியிடம்,
ஆத்தா ! என் மகன் கல்யாணத்துக்கு எடுத்துக் குடுக்குறேன்” என்று இளவரசு சொல்லி முடிப்பதற்குள்,”அப்பா ! அண்ணன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வாசல்ல வந்து நிக்குதுப்பா” என்று அவரது மகள் ஓடிவந்து சொல்வது.

இதோ ! சண்டை வரப்போகுது. அருவாள எடுத்துக்கிட்டு, நாக்கை கடிச்சுகிட்டு சண்டை போடப்போறாங்க என்று நினைக்கும் போது, அந்தக் காட்சி, காமெடியாய் முடிவது.

இந்தப் படத்தில், மிக இயல்பான நடிப்பில் முதலில் இருப்பவர் இளவரசு. தவமாய் தவமிருந்து படத்தை விட, அருமையாக செய்திருக்கிறார்.

 ”பசங்க” படத்தை அடுத்து எல்லாரும் பார்க்கக்கூடிய படம் இது.

13 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

நல்ல ரசிச்சுப்பார்த்திருக்கீங்க போல....:)) நான் இன்னும் பார்க்கலையே...

பின்னோக்கி said...

நன்றி - நாஞ்சில் - படம் முழுவதும் துபாய் பற்றி சொல்கிறார்கள். நன்றாக இருக்கிறது.உங்களுக்கு பிடிக்கும்.

geethappriyan said...

ரொம்ப நல்ல ரசனையான் பார்வை,இந்த படத்தின் அற்புதமான ப்ரிண்டுக்காக் வெயிட்டிங்,இதை யெல்லாம் இங்கே திரையிடவே மாட்டாங்க,பையா,ராவணன்,கோவா மாதி படம் தான் இங்க போடுவான்,.

க ரா said...

ரசிச்சு ரசிச்சு பார்த்துகிட்டே இருக்கேன். 10வது தடவையா நேத்திக்கு நைட்லேந்து.

பின்னோக்கி said...

நன்றி - ஷென்ஷி

நன்றி - கார்த்திக் - புரியுது உங்க நிலைமை :)

நன்றி - இராமசாமி கண்ணன் - ஆமாங்க. இப்படி ஒரு வெள்ளந்தியான ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.

Murugavel said...

படத்தின் ஆரம்பத்தில், பசங்க கைலியோட விளயாட வந்துட்டானுக, மாடு மேய்க்க வந்தானுகளானு சண்ட போடுவது, பஞ்சாயத்து கஞ்சா கருப்ப ஒட ஒட விரட்டுவது, அவர் கண் முன்னாலேய மரண அறிவிப்பு, ரிக்கார்ட் டான்ஸ் மேடையில் துண்டு சீட் எழுதி பொண்டாட்டியிடம் மாட்டி விடுவது, சிகெரட் பாக்கெட்டில் மீதி இருக்கும்போதெ தூக்கி போட்டு, ஒசி கேட்டவர் போனவுடன் எடுப்பது இப்படி இன்னும் சுவாரசியமான காட்சிகள் நிறைய,


நன்றி,

கி. முருகவேல்,
அபுதாபி, (சோழ நாடு)

geethappriyan said...

நண்பரே நேற்று இளவரசு பற்றி சொல்ல வந்து மறந்துவிட்டேன்,மிக அருமையான அண்டர்ரேட்டட் நடிகர்ங்க அவர்,அவரை நாம் என்னும் படத்தில் இருந்து கவனிக்க ஆரம்பித்தேன்,பாத்திரமாகவே ஒன்றிவிடுவார்.எனக்கு தவமாய் தவமிருந்துவில் ராஜ்கிரனின் நடிப்பை அடுத்து இவரைன் நடிப்பை மிகவும் சிலாகித்தேன்,செவித்திறன் குறைபாடு உள்ள அச்சுகோர்ப்பவர் வேடம்,அதை திறம்பட செய்திருப்பார்.டீவி யில் இவர் வரும் காட்சி வந்தால்,சரியாய் கண்ணில் மாட்டும்,அதை பார்ப்பேன்.இப்போது பொக்கிஷத்திலும் கூட கல்கத்தா தமிழராய் கலக்கியிருப்பார்.தமிழில் கொடுமை உச்ச நடிகர் ,அப்புறம் காமெடி நடிகர்,இந்த கேரக்டர் ரோல் செய்பவர்களுக்கு அங்கீகாரமே கிடைக்கமாட்டேங்கிறது.

ராகின் said...

ரொம்ப ரசிச்சு பார்த்திருக்கீங்கறதை விமர்சனம் சொல்லுது.. :)

பின்னோக்கி said...

நன்றி - கார்த்தி - சரியாக சொன்னீர்கள். மிகவும் கவனிக்கப்படாத நடிகர் இளவரசு. என்னமோ தெரியவில்லை, இந்தப் படத்தில் அவரை ரொம்ப பிடித்துவிட்டது. காமெடியாக செய்திருப்பதால் இருக்கும். 19 வயது இளைஞன் ஒருவனின் தந்தை வேடத்தை அழகாக ஏற்றிருக்கிறார். சரண்யா கூட சில இடங்களில் நடிப்பது தெரிகிறது. இவர் நடிப்பது மாதிரியே தெரியவில்லை. Excellent ACTOR

பின்னோக்கி said...

நன்றி - முருகவேல் - நீங்கள் குறிப்பிட்ட காட்சிகளும் அருமை.

நன்றி - ராகின்

அமுதா said...

ரொம்ப இரசிச்சு பார்த்திருக்கீங்க போல் :-)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பின்னோக்கி ! தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் தவறாமல் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

Eswari said...

// ராகின் said...

ரொம்ப ரசிச்சு பார்த்திருக்கீங்கறதை விமர்சனம் சொல்லுது.. :)//

Repeatu

அதான் எங்க பாப்பாவுக்கும் இந்த படம் புடிச்சி இருக்கு.