26 August 2012

தேசாந்திரியிலிருந்து சில துளிகள்


மீள் பதிவு:

இன்று காலையில் எழுந்த போதே சென்னை மேக மூட்டத்துடன் ரம்யமாக இருந்தது. சோம்பலுடன், ஜன்னலை திறந்த உடன் முகத்தில் பட்ட சில்லென்ற காற்று உற்சாகத்தை தந்தது. இந்த வானிலையில் பயணம் மேற்கொள்வது இனிய அனுபவமாக இருக்கும். ஆனால் சோம்பல், வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்காத போது, பயணத்தின் இனிமையை அனுபவிக்க ஒரே வழி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தேசாந்திரி. ஜன்னல் வழியே வழிந்த சிறிய வெளிச்சத்தில், மெத்தென்ற படுக்கையில், அமைதியான சூழ்நிலையில் புத்தகத்தில் மூழ்கினேன். பல முறை படித்திருந்த போதும், ஒவ்வொருமுறை படிக்கும் போது பயணத்தின் சுகானுபவம். இவருக்கு மட்டும் வித்தியாசமான கண்கள். சாதாரணமான விஷயங்களை இவர் எழுத்தின் வழியே படிக்கும் போது, “அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என வியப்பாக இருக்கிறது. இவரின் பல புத்தகங்களை படித்திருந்தாலும், தேசாந்திரி - என் மனதுக்கு நெருக்கமான புத்தகம். புதியதாக இந்த புத்தகத்தை படிக்க விழைபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சப்தங்கள் மிக குறைந்த, இடையூறுகள் இல்லாத நேரத்தில், அமைதியான மன நிலையில் படியுங்கள்.

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது, தேசாந்திரி புத்தகத்தின் சில துளிகள்..அதுவும் தேன் துளிகள். ரசித்தவற்றை எழுதவேண்டுமென்றால், புத்தகம் முழுவதையும் எழுதவேண்டும்.பலர் பல பதிவுகளில் இப்புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தாலும், எனக்கு பிடித்த சில வரிகள் இவை.

இனி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விழி வழியே இவ்வுலகம். 
------------- 
2 - சாரநாத்தில் ஒரு நாள்
இந்தச் சாலைகள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது!

-------------
4 - லோனாவாலாவில் பார்த்த மழை
மழை பெய்யத் துவங்கியதும் மனித சுபாவம் மாறத் துவங்கிவிடுகிறது. யாரும் குரலை உயர்த்திப் பேசிக்கொள்வதிலை. மாறாக, மழை பெய்யும்போது யார் யாரைப் பார்த்தாலும், முகத்தில் மெல்லிய சிரிப்பு கரை தட்டி நிற்பதை உணர முடிகிறது. மழை ஒரு தியானத்தைப் போல மெள்ள நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது.

------------
5 - பாடப் புத்தகங்களுக்கு வெளியே...!
சரித்திரம் நம் உடையில், உணவில், பேச்சில், அன்றாட நடவடிக்கைகளில் தினமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் அணியும் சட்டையில் உள்ள பொத்தான்கள், பெர்சீயாவில் இருந்து வந்ததையும், நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு வெள்ளைக்காரர்கள் நமக்கு அறிமுகம் செய்தது என்பதையும் நாம் சரித்திரம் என்று உணர்வதில்லை.

லண்டனில் ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். ஆனால், பாரதியார் பிறந்த இடத்தை எத்தனை பேர் நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள் ?

--------
6 - கண்ணால் வரைந்த கோடு
மலையின் மீது நடக்கத் துவங்கியதும் நகரம் நம் காலடியில் நழுவிப்போகத் துவங்குகிறது. உயரம் ஒரு அதிசயம் என்பதை, மனது மெல்ல உணரத் துவங்குகிறது. தரையில் இருந்து காணும் பொருட்கள், ஏன் உயரத்துக்குப் போனதும் இத்தனை ஆச்சர்யமாக மாறிவிடுகின்றன என்று வியப்பாக இருக்கிறது.
(தினமும் என் அலுவலகத்தின் ஜன்னல் வெளியே தெரியும் புனித தாமஸ் மலை (செயின்ட் தாமஸ் மவுண்டை) இவர் பார்வையில் பார்க்கும் போது, 20 வருடங்களாக சென்னையிலிருந்தும் இந்த இடத்தை பார்க்கவில்லையென வெட்கமாக இருக்கிறது)

---------
7 - நிலமெங்கும் பூக்கள்
பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்.... எத்தனைவிதமான மலர்கள்...! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் !.

---------
10 - அருவியாடல்
குற்றாலம் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே அருவியின் சப்தமும், ஈர வாடையும், குரங்குகளும் நினைவில் எழுந்துவிடுகின்றன.

அருவியைப் பார்த்துச் சிரிக்காதவ்ர் எவரும் இருக்கிறார்களா என்ன ? அருவியின் முன்னே வயது கலைந்து போய்விடுகிறது. அருவியின் முன்னே நம் பேச்சுக்கள் யாவும் ஒடுங்கிவிடுகின்றன. அருவி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.

--------
15 - அறிந்த ஊர்
பின்னிரவில் எல்லா ஊர்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அதிலும் பேருந்து நிலையங்களும் அதைச் சுற்றிலும் உள்ள சிறு கடைகளில் எரியும் டியூப் லைட்டுகள் மற்றும் பாதி உறக்கம் பீடித்த பெட்டிக்கடைகள், காலியான நாற்காலிகளுடன் பால் கொதிக்கும் டீக்கடைகள், உறக்கத்தின் பிடியில் சுருண்டுகிடக்கும் வயதானவர்கள், கால்கள் மட்டும் வெளியே தெரிய உறங்கும் ஆட்டோக்காரர்கள்.

--------
25 - ஒரு கோயில்.. சில காட்சிகள்!
முன்பு எல்லா ஊர்களின் ரயில் நிலையத்தின் முன்பாகவும், குதிரை வண்டிக்காரர்கள் நிற்பார்கள். வண்டிக்குள் வைக்கோல் பரப்பி, அதன் மீது சமுக்காளம் விரித்திருப்பார்கள். குதிரை வண்டிகளின் இடத்தை இன்று ஆட்டோக்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.

--------
35- ஒளிரும் எண்கள்
கும்பகோணதில் உள்ள கணித மேதை ராமனுஜத்தின் நினைவு இல்லத்தில் குனிந்து செல்ல வேண்டிய அளவு தாழ்வான கூரை அமைப்பு. வீட்டில் யாரும் இல்லை. ராமானுஜத்தின் மூச்சுக் காற்றும் விரல் ரேகைகளும் மட்டுமே மீதம் இருக்கின்றன. இந்த அறையில் ராமானுஜம் படித்துக்கொண்டு இருந்திருப்பார் என்கிற காட்சி மனதில் கடந்து போனது.


--------
36 - உறங்கும் கடல்
தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன.

--------
41 - நோக்கும் திசையெல்லாம்
பின்வாங்கியோடும் அலையைப் போல இரவு, தன் இருப்பிடம் திரும்பத் துவங்கி இருந்தது. உலகில் ஒவ்வொரு நாளும் இதே போலத்தான் இரவு விடைபெறுகிறது. சில நிமிடங்களில் வெளிச்சம் உலகின் மீது தன் நிறத்தைத் தீட்டத் துவங்கியது. பனி படர்ந்த இமயமலை கண்ணில் படத் துவங்கியது. இதே சூரியனைத்தான் இத்தனை வருடங்களாகக் காண்கிறேனா ? ஏன் இந்தப் பிரமாண்டம், வசீகரம் என் ஜன்னலைத் திறந்து பார்க்கும் போது கிடைக்கவே இல்லை. எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும், இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்.

 -----------
புத்தகம்     : தேசாந்திரி
வெளியீடு: ஆனந்தவிகடன்
விலை       :ரூபாய் 110.
நன்றி(படங்களுக்காக): examiner.com,ramasundaram.sulekha.com,bloggersbase.com,moxhafinearts.com,pacificbulbsociety.org

15 August 2012

October Sky (அக்டோபர் ஸ்கை)

ஒரு சினிமாவைப் பார்த்தவுடன் பிடித்துப் போக அந்த சினிமாவில் எதோ நாம் முன்பு பார்த்த அல்லது பார்க்காத, ஆனால் பிடித்த விஷயம் இருக்கவேண்டும். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், சிலருக்கு தன்னம்பிக்கையும் கொடுத்தால் அந்த சினிமாக்கள் காலத்தை வென்றவையாக க்ளாசிக் வரிசையில் இடம் பிடிக்கிறது. அந்த வரிசையில், நான் பார்த்து ரசித்த படம் இது.

October Sky - 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம். மிகவும் எளிமையான கதை. 1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன், ஸ்புட்னிக் என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தியது. அந்த செய்தி கேட்ட பிறகு, பலருக்கு (சிறுவர்களுக்கு) வானவியலில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவில்   உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு சிறிய ராக்கெட் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்ற பெரிய ஆர்வம். அவனது அப்பா, அந்த கிராமத்திலிருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களில் ஒருவர். வழக்கம் போல தன் மகனின் இந்த ஆசையை பெரிதாக விரும்பாதவர்.

ராக்கெட் மேல் அவன் கொண்ட ஆர்வத்தை பலர் கேலி செய்ய, சில நண்பர்களுடன் சேர்ந்து அவன் எப்படி ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கிறான் என்பதே கதை.

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த விஷயங்கள்:

1957 ஆம் வருடம் நடக்கும் கதை. ஒரு நிலக்கரி சுரங்கள்; அதனையொட்டி இருக்கும் சிறு குடியிருப்பு என நம்மை 1957ஆம் வருடத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு சின்ன அறிவியல் விஷயத்தை நிஜமாக்க அவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்.

சிறிது சிறிதாக அவர்கள் செய்யும் ஆராய்ச்சிகள்; அவர்கள் தயாரிக்கும் முதல் ராக்கெட்டுக்கும், படத்தின் இறுதியில் வரும் ராக்கெட்டுக்கும் இடையில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி.

அவர்கள் அதைச் செய்ய தரும் விலை; யாரெல்லாம் அவனுக்கு உதவுகிறார்கள்; நேரிடும் தடங்கல்கள் என்ன ?;

விளையாட்டாய் அவர்கள் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டால் ஏற்படும் விளைவுகள்;  சோகங்கள், சிரிப்புகள், சந்தோஷ தருணங்கள் ; தன்னம்பிக்கைகள்  என இந்தப் படம் கற்றுத்தரும் பாடம் நிறைய.

சிறியவர்களும், பெரியவர்களும், அறிவியலில் ஆர்வம் கொண்டவர்களும், தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல சோர்வில்லாமல் தன் கனவுகளைத் தேடிச் சொல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது.

12 August 2012

ஒரு காமிக்ஸின் கதை


            ஞாயிறு மதியம் மூன்று மணி ரேடியோ நாடகத்தை, ரேடியோ பக்கத்தில் உட்கார்ந்து ரெக்கார்ட் பண்ண வசதியாக கேசட் போட்டுவிட்டு, ரெக்கார்ட் பட்டனை எப்ப அழுத்தணும்னு உட்கார்ந்திருந்த காலம்.



   
   திருவிளையாடல் பட வசனக் கேசட் கேட்டு கேட்டு மனப்பாடமாகியிருந்த காலம்.

-      




     
        

         நால்ணா என்று சொல்லப்பட்ட 25 பைசா அப்பா தந்தார்ன்னா அது ரொம்ப அதிகமான பணம். அதுக்கு 5இல் இருந்து 10 மிட்டாய் தரும் காலம்.     25 பைசாவுக்கு ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் கிடைத்த காலம்.

-          




   கருணாநிதியை விடாமல் எம்.ஜி.யார் தேர்தலில் தோற்கடித்த காலம்.

-  



   ராஜேஷ்குமார் எழுதிய க்ரைம் நாவல் கதைகளை பயந்துகொண்டே படித்த காலம்.

-       



      
 மளிகைக் கடையில் 25 பைசாவுக்கு வாடகைக்கு ராணிகாமிக்ஸ் புத்தகம் எடுத்து இரண்டு நாட்களில் படித்துவிட்டு திருப்பித் தரும் காலம்.


-       சைக்கிள்களில் வீடுகளுக்கு வந்து லெண்டிங் லைப்ரரி (மங்கையர் மலர், தேவி, கோகுலம் போன்ற புத்தகங்கள்) தந்துகொண்டிருந்த காலம்.

-       பம்பரம், கிட்டிபுல், பட்டம், கோலிகுண்டு போன்ற விளையாட்டுக்களுக்கு தனி சீசன் இருந்த காலம்.

-       தெருவில் விளையாடும் பசங்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சைக்கிள் ரிக்‌ஷா ஓடிக்கொண்டிருந்த காலம்.

-       ஈசி சேர் என்ற ஒரு அற்புதமான ஓய்வெடுக்கும் சாதனம் இருந்த காலம்.

இப்படியான ஒரு காலத்தில் முதல் முறையாக என் அண்ணன் ஒரு காமிக்ஸ் வாங்கிவந்தான். வித்தியாசமான வடிவில் பாக்கெட் சைசில், போட்டிருந்த டிராயரில் வைத்துக்கொள்ளும் வகையில் இந்த அந்த புத்தகம் உடனடியாக மனதுக்குள் புகுந்தது. சிவகாசியில் இருந்து வந்துகொண்டிருந்த லயன் காமிக்ஸ்தான் அது. ராணிக்காமிக்ஸ் படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், இதில் வந்த கதைகள், ஹீரோக்கள் மற்றும் மொழிபெயர்ப்பில் ஒரு ரசிக்கும் தன்மை என்று ஒரு அற்புதமான பொழுதுபோக்குக்கு படிக்கும் புத்தகமாக வீட்டில் இடம் பிடிக்கத் தொடங்கியது. ரூ 2. சில நேரங்களில் கேட்ட உடன் கிடைக்கும், பல நேரங்களில் 25பைசா பாக்கெட் மணி சேர்த்து காமிக்ஸ் வாங்குவோம்.

மெயின் ரோட்டில் சைக்கிள் ஓட்டும் உரிமைப் பெற்ற என் அண்ணன் மட்டுமே கடைகளுக்குப் போய் வாங்கிவருவான். முதலில் படிக்கும் உரிமையும் அதனால் அவனுக்கே. அதுவரை சேகரித்து வந்த பொருட்கள் அனைத்திலும் ஈடுபாடு போய், காமிக்ஸ் சேகரிக்கும் காலம் தொடங்கியது.

உடல்நிலை சரியில்லாததால் ஸ்கூலுக்கு லீவு போட்ட ஒரு நாளில், இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை காலையிலேயே வாங்கி வந்து என்னிடம் தந்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றான் என் அண்ணன். அந்த புத்தகம் சூப்பர் சர்க்கஸ்”. முதல் முறையாக முழு வண்ணத்தில் வந்த அந்த புத்தகம் மனதைக் கவர்ந்தது. அட்டைப்பட்த்திலேயே, ஒரு கயிற்றின் மேல் வைக்கப்பட்டிருக்கும் பந்து ஒன்றின் மேல் ஒரு குதிரை, குதிரை மேல் ஒருவன், மற்றும் அந்த குதிரை ஸ்கிப்பிங் செய்துகொண்டு என்று அமர்க்களமாக வித்தியாசமாக இருந்தது. மற்றொரு புத்தகம் “பழி வாங்கும் பாவைஎன்ற பெயரில் டெக்ஸ்வில்லர் கதை. அமெரிக்காவில் இருந்த செவ்விந்தியர்களும், கௌபாய்களுடனும் நாங்களும் பயணம் செய்ய ஆரம்பித்தோம்.

காது நீண்ட, ஹெலிகாப்டர் போன்ற ஒரு வாகனத்தில் வலைத்துப்பாக்கியுடம் ஒரு ஹீரோ கம் வில்லன் (ஸ்பைடர்). ஒரு ரோபாட் (ஆர்ச்சி), இரவுக்கழுகு என்று பட்டபெயர் வைத்துக்கொண்டிருந்த ரேஞ்சர் (டெக்ஸ்வில்லர்), லக்கிலூக், ஜாலிஜம்பர், சிக்-பில் போன்ற கார்ட்டூன் கதைகள் என்று ரசனையை வேறு தளத்திற்கு இட்டுச்சென்றது லயன், முத்து, மினி மற்றும் ஜீனியர் லயன் கதை புத்தகங்களே.

நான் எல்லாம் சிம்ரன் போஸ்டரையே ஒரு நாள் பார்ப்பேன் என்பது போல, ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வந்த உடன் காமிக்ஸ் எடுத்து புரட்டுவது, அடுக்கி வைப்பது என்று, படிப்பது மட்டுமல்லாது அதனைப் பார்ப்பதும் ஒரு பொழுதுபோக்காக மாறியது. விடுமுறை நாட்களில் படித்த புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிப்பது; தீர்ந்து போன நோட்டுப்புத்தகங்களின் அட்டையைப் பிய்த்து, காமிக்ஸ் அளவுக்கு அதை வெட்டி, வீட்டிலேயே பைண்டிங் செய்ய ஆரம்பித்து நேர விரயம் அதிகமானதால், கோபம் கொண்ட என் அம்மா ஒரு நாள் எல்லா காமிக்ஸ்சையும் எடுத்து வெளியே போட்டார். பிறகு போராடி, சில சத்தியங்கள் செய்து மீண்டும் வீட்டுக்குள் வைக்கும் அனுமதி பெற்றோம்.

கால ஓட்டம், அப்பாவுக்கு அடிக்கடி கிடைத்த டிரான்ஸ்ஃபர் மற்றும் டிவியின் அறிமுகம் போன்றவை சேர்த்துவைத்த காமிக்ஸ்களை பத்திரமாக வைக்காமல் அனைத்தையும் இழக்க நேரிட்டது. சில வருடங்களில் காமிக்ஸ் என்ற ஒரு வஸ்து மனதிலிருந்து மறைந்தே போனது.

கிபி 2003 ஆம் ஆண்டு எதோச்சையாக லயன் காமிக்ஸ் வெப்சைட் பார்த்ததில் மீண்டும் தொடங்கியது காமிக்ஸ் ஆர்வம். அப்பொழுதுதான் பலரும் தன் சிறுவயதில் படித்து, பாதுகாக்க மறந்த காமிக்ஸ்களைத் தீவிரமாக தேட மற்றும் சேகரிக்க பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. சிறுவயதில் படித்த பல கதைகள் இப்பொழுது படித்தால் ரசிக்க முடியாமல் போனதும் தெரிந்தது (சில ஹீரோக்கள் - ஸ்பைடர் மற்றும் டெக்ஸ்வில்லர் இன்றும் படித்து ரசிக்க முடிகிறது). ஆனால், பழைய காமிக்ஸ்களைப் பார்க்கும் போது வரும் மகிழ்வான சிறுவயது நியாபகங்களை அனுபவிப்பதற்கு 35+ வயதான பலரும் இன்னும் காமிக்ஸ்களை வாங்கிப் படித்து மகிழ்கிறார்கள். அதில் நானும் ஒருவன். இன்று காமிக்ஸ் வாங்கிப் படிப்பதை கேலியாக பார்க்கும், இத்தனை க.வயசு ஆச்சு இன்னும் காமிக்ஸ் படிக்கிறியா போன்ற கேள்விகளும் மத்தியிலும், ஆர்வம் குறையவில்லை.

காமிக்ஸ் என்பது சிறுவர் படித்து மகிழ மட்டுமே என்ற எண்ணம் அதிகம் பேருக்கு இருக்கிறது. ஆனால் XIII, கேப்டன் ப்ளூபெரி போன்ற கதைகளைப் படித்தவர்கள் மற்றும் படித்தவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக கீழே இரண்டு சித்திரங்களை மட்டும் தந்திருக்கிறேன். இந்தக் கதைகள் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றவைகள். பல இலட்சம் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.

XIII - அமெரிக்காவின் குடியரசுத் தலைவரை கொன்ற பழியை சுமந்து கொண்டு, தன்னைப் பற்றிய நியாபகங்கள் மறைந்த நிலையில், தன்னைப் பற்றி அறிய முற்படும் ஒருவனின் கதை இது. மிகவும் சிக்கலான கதை அமைப்பு, அற்புதமான ஓவியங்கள் என்று மிக பிரம்மாண்டமான கதை இது.
சில வருடங்களுக்கு முன் இந்தக் கதை “இரத்தப் படலம்” என்ற பெயரில் 800+ பக்கங்களுடன், லயன் காமிக்ஸில், ரூ 200 விலையில் வெளியிடப்பட்டது.

கேப்டன் ப்ளூபெரி கௌபாய் கதை வரிசைகளில் மிகவும் அதிக ஆராய்ச்சி செய்யப்பட்டு, வரலாற்று பின்னணிகளுடன், நுணுக்கமான போர் தந்திரங்கள்; செவ்விந்தியர்களின் வாழ்வினைப் பற்றிய உண்மையான பதிவு என்று மிகவும் தத்ரூபமான கதை இது.

     
லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் தற்போது புதுப் பொலிவுடன், சர்வதேச தரத்தில், முழு வண்ணத்தில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். சந்தா செலுத்தி வீட்டுக்கே வரவழைக்கலாம். தகவல்களுக்கு இங்கு பார்க்கவும்.

படிக்கும் பழக்கம் அறவே மறந்து போன நம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு இந்த புத்தகங்களை அறிமுகம் செய்யலாம். அதன் மூலம் அவர்களின் இளமைக்காலத்தையும் மறக்கவியலா ஒன்றாக மாற்ற முடியும்.

சிறுவர்களை சந்திக்க இவர்களும்

இளைஞர்களை சந்திக்க இவர்களும் 


காத்துக் கொண்டிருக்கிறார்கள் ...