1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பின்னோக்கி
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மையான பெயர் *****. என்னது ? ஒரே * ஆ தெரியுதா ?. அப்ப நீங்க ஒழுங்கா இன்கம்டாக்ஸ், இந்த வருஷம் அல்லது எந்த வருஷமும் கட்டலைன்னு தெரியுது. ஒழுங்கா கட்டுனவங்களுக்கு இது * ஆ தெரியாது. இப்ப சொல்லுங்க, என் உண்மையான பெயர் தெரியுதா ? தெரியலையா ?. தெரியலைன்னு சொல்றவங்க, அவங்களோட முழு விலாசத்தையும் எனக்கு அனுப்பி வைங்க. ஹலோ... இதுக்கெல்லாம் மிரண்டு போய், பதிவ படிக்காம போய்டாதீங்க..
சின்ன வயசு அனுபவங்களைப் பத்தி எழுத வேண்டும்னு தோணுச்சு. அதுனால பின்னோக்கின்னு பெயர் வெச்சுக்கிட்டேன். இப்ப, ரோடுல போனா, எல்லாரும் பின்னோக்கி !! பின்னோக்கின்னு ரொம்ப பாசமா கூப்பிடுறாங்க (பின்னாடி பார்த்து வண்டி ஓட்டாத ! முன்னாடி பார்த்து ஓட்டுன்னு திட்டுறாங்கன்னு, யாரும் பின்னூட்டம்... அட ! பாருங்க இதக் கூட பின்னூட்டம்னுதான் சொல்றோம். முன்னூட்டம்னு சொல்றதில்லை.) போதும் என் பெயர்க்காரணம்னு நினைக்கிறேன். நெக்ஸ்ட் கொஸ்டியன் ப்ளீஸ் !!
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
ம்ம்.. அது ஒரு பெரிய கதை. ஒரு டவுட்டு. எதுக்கு எல்லாரும் உண்மைய சொல்றத்துக்கு முன்னாடி அத கதைன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க ?. சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் பையனுக்கு ஸ்கூல்ல, தமிழ் கட்டுரை எழுத சொன்னாங்க. தமிழ்ல டைப் பண்றத்துக்கு nhm writer டவுன்லோடு பண்ணி, டைப்படிக்க கத்துக்கிட்டு, அப்புறமா ஏன் நம்மோட எண்ணங்களை, எல்லாருக்கும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். எழுத ஆரம்பிச்சேன். அப்ப ஆரம்பிச்சது இந்தப் பயணம். (யார் அங்க ?? டிக்கெட் வாங்கியாச்சான்னு கேட்குறது ?)
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முதல் பதிவு போட்ட உடனே, தமிழ்மணத்துல சேர்த்தேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, தமிழிஸ்ல சேர்த்தேன். யாரும் இல்லாத கடைக்கு டீ ஆத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா. நாம ஒரு பதிவு எழுதி, அத நாம மட்டுமே படிக்குறது ரொம்பக் கொடுமைங்க. அப்புறம் என் ஆபீஸ்ல இருக்குறவங்கள மிரட்டி என் பதிவ படிக்க வெச்சேன். கொஞ்ச நாள் கழிச்சு, எல்லாரும் என்கிட்ட பேசவே பயந்தாங்க. எங்க ! பேசுறத எல்லாம் எடுத்து பதிவா போட்டுடப்போறானோன்னு.
ரொம்ப பிரபலமான உடனே, கொஞ்சம் நாள் முன்னாடி ஞானோதயம் (யாரால ? என்னது ! நித்தின்னு யாரோ சொல்ற மாதிரி இருக்கே. அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க) வந்தது. இப்ப பேஜ் கவுண்டர்ர என் ப்ளாக்குல இருந்து எடுத்துட்டேன். (ஏய் ! ரொம்ப நடிக்காத, இப்பத்தான் ப்ளாக்கர்லயே எத்தனைப் பேர் வந்தார்கள் ! சென்றார்கள்னு குடுக்குறாங்களே..) சே..இந்த மனசாட்சியோட தொல்லைத் தாங்கலை. அப்ப அப்ப வந்து தொல்லைக் குடுக்குது.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஒரு பத்து பதிவு தவிர, மத்ததெல்லாம், சொந்த விஷயம் தான். வேற யோசிச்சு எழுத அளவுக்கு சரக்கு இல்லைங்க. வீட்டுல திட்டுவாங்க, எல்லாத்தையும் எழுதறீங்களேன்னு. நண்பர்கள் என்னையப் பார்த்தாலே தெரிச்சு ஓடுறாங்க. பேச பயப்படுறாங்க. மொத்தத்துல ஒரு டெரர்ர பார்க்குறமாதிரி பார்க்குறாங்க. இது தாங்க பக்க விளைவு.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
என்னது ?? எழுதறத்துக்கு காசு குடுக்குறாங்களா ?. நான் எழுதறதயெல்லாம் படிக்குறத்துக்கு, படிக்குறவங்களுக்கு காசு குடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எழுதறாதல, நாலு பேரு ஓட்டு போடுறாங்க. நல்லா எழுதறன்னு சொல்றாங்க. எல்லா மனசும் ஒரு சின்ன பாராட்டுக்குத்தான் ஏங்கிக்கிட்டு இருக்குன்னு விமல் சொன்னார் இல்லையா ? அதுக்காகத்தான் எழுதறது.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்று மட்டுமே. இதுல எழுதவே, மேட்டர் எதுவும் சிக்க மாட்டேங்குதுங்க.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம் வந்ததில்லைங்க. பொறாமை வந்துருக்கு. கொஞ்சம் வயித்தெரிச்சல் கூடப் பட்டிருக்கேன். அந்த லிஸ்ட் கீழே...
ஒரு ஐடியா கிடைச்சாலே அத ஒரு பதிவா போட்டுடுவேன். ஆனா இவரு, ஒரே பதிவுல 10 ஐடியா எழுதுறாரு. ரூம் போட்டு யோசிக்கிறாருன்னு நினைக்கிறேன்.
10 வரி யோசிச்சு எழுதறத்துக்குள்ள நாக்குத் தள்ளிடுது. இவரு, எழுத ஆரம்பிச்சாருன்னா, கதையாக் கொட்டுது.
இப்பல்லாம், மனசுல கவிதையாக் கொட்டுது. ஆனா, அந்த எழுத்துதான், வார்த்தை சிக்க மாட்டேங்குது. இவங்களுக்கு மட்டும் எங்க இருந்து வார்த்தை சிக்குதுன்னு தெரியலை.
வயசு ஏற ஏற அனுபவம் கூடும்னு சொல்லுவாங்க. எனக்கு அப்படி எதுவும் இதுவரை தெரியலை. ஆனா, இவரு வாழ்க்கையில பார்த்த மக்கள் எத்தனை பேரு பாருங்க. (இவருக்கு ரொம்ப கூச்ச சுபாவம். அதுனால, அவரோட போட்டோவ போடலை)
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
தொடர்புகொண்டு பாராட்டுனது இல்லை. ஆனா, முதல்ல பின்னூட்டமிட்டவங்க ஈஸ்வரி. அவங்களுக்கு ரொம்ப நன்றி.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
இது நல்லக் கதையா இருக்கே. இங்கயே எல்லாத்தையும் சொல்லிட்டா, அப்புறம் பதிவு எப்படி போடுறது ?. அதுனால, தினமும் வந்து, என் பதிவ படிங்க. அதுல பதிவுலகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை சொல்றேன்.