25 October 2010

வந்துடுச்சு (காமிக்ஸ்) தீபாவளி

நீங்கள் காமிக்ஸ் பிரியர் என்றால், யுவகிருஷ்ணா (லக்கிலூக்) அவர்களின் இந்தப் பதிவை கண்டிப்பாக படியுங்கள். காமிக்ஸ் பிரியர்களுக்கான ஸ்பெஷல் தீபாவளி வந்துவிட்டது. தகவல் தந்த யுவகிருஷ்ணாவுக்கு நன்றி.

அக்டோபர் - 1987 - தீபாவளி



அக்டோபர் - 2010 - தீபாவளி

இன்று காமிக்ஸ் கிடைத்தது. அட்டைப் படங்கள் இங்கே.

08 October 2010

எந்திரன் - திரைக்கதையில் தந்திரன் ?

ஒரு வழியாக முக்கியமான ஜனநாயக கடமையான எந்திரன் படம் பார்த்தல் நிறைவுக்கு வந்தது. இந்தப் படத்தில் நடிக்க ஏன் ரஜினி சம்மதித்தார் என்று புரியவில்லை. படம் பார்க்கும்போது ஸ்கிரீனில் தெரிவது ரஜினி என்ற உணர்வே ஏற்படவில்லை. சங்கர், பழைய பாக்கியராஜ் பட சிடிக்களை உடனடியாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். திரைக்கதை படு சொதப்பல். ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிவதற்கு பதிலாக எப்பொழுது முடியும் என்று இருந்தது.

தீ விபத்தில் காப்பாற்றப்படும் பெண்ணின் தற்கொலை; அதுவும் லைவ்வாக டிவியில் காட்டப்படுவது  - என்ன ஆச்சு சங்கருக்கு என்ற கேள்வி எழுப்பியது.

சயன்டிஸ்ட் ரஜினியை அடக்கிவாசிக்க வைத்தாகிவிட்டது. ரோபோ ரஜினியும், தன் மேனரிசங்களை காட்ட முடியாத நிலையில் இருப்பதற்கு காரணம் அது ஒரு இயந்திரம். ஒரிஜினல் ரஜினியை ரசிகர்கள் பார்க்க இருந்த ஒரே வாய்ப்பு வில்லன் ரஜினி. கார், ஹெலிகாப்டர் மற்றும் போலீசைத் தாக்குவதே முழுவேலையாக இருந்ததால், வில்லன் ரஜினிக்கும் ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றவைகள் சண்டை போடுவதிலேயே போய்விட்டது. அவர் சிரிக்கும் சிரிப்பு கொஞ்சம் அதிகமாகவே பட்டது.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் சம்மந்தப்பட்ட காட்சிகள் தனியாக எடுத்து பிறகு கிராபிக்ஸ் செய்து ஒட்டிவிட்டார்களோ என்று தோன்றியது. பல இடங்களில் அவரின் ரியாக்‌ஷன் காட்சியமைப்பிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. வில்லன் ரஜினி தன் மாளிகைக்கு அவரைக் கடத்திப் போகும்போது, பொருட்காட்சியில் வேடிக்கை பார்ப்பது போன்ற அவரது ரியாக்‌ஷன்..ம்ம்...

உலக அழகி, ராம்ப் வாக் செய்யவேண்டும். அப்படி செய்யும் போது கையில் எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு போகவேண்டும். அதற்காக ஒரு சூட்கேஸ். அந்த சூட்கேஸில் “காதல்ரத்து பத்திரம்”. சங்கர்ஜி என்னங்க இதுதானா உங்க 10 வருஷ திரைக்கதை உழைப்பு ??. பாலகுமாரன் மற்றும் சுஜாதா போன்றவர்களின் உதவி கிடைக்கவில்லையா ?



கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

முத்தாய்ப்பாக, வில்லனுக்கு பில்டப் பாடல்வைத்து சங்கர் தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்று நிரூபித்திருக்கிறார்.

மற்ற விஷயங்களை இந்தப் பதிவுகளில் சொல்லிவிட்டார்கள்.

ஜய்ன்ஜ் பிக்ஜன்(எந்திரன்) - விசா பக்கங்கள்
எந்திரன் (2010) - கருந்தேள் கண்ணாயிரம்
எந்திரன் - கருப்புபெட்டி

ரஜினி தன் அடுத்தப் படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்யவேண்டும் என்பதே என் போன்ற ரசிகனின் வேண்டுகோள்.

10 September 2010

அப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க

டெக்சாஸ் - தீயணைப்புப் பிரிவில் வேலை பார்த்த தாம்சனுக்கு,  2000ஆம் வருடம் மிக மோசமாக இருந்தது. முதலில் தீயணைப்பு வண்டியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். பிறகு நடந்த அறுவை சிகிச்சையில் தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தார்.

ரு நாள் காலை, தாம்சனுக்கு வயிற்றில் நெருப்பு எரிவது போல் இருந்தது. திடகாத்திரமான 32 வயது இளைஞன், இவ்வளவு நோய்வாய்ப்பட்டு யாரும் பார்த்ததில்லை. வயிற்றைத் தாக்கும் ஒரு வைரஸ் நோய்க்கு மருந்து சாப்பிட்டதில் உடல் நிலை தேறினார். இரண்டு நாள் கழித்து, மனைவி, லின் செய்து தந்த ஸ்வீட் டீ மற்றும் சாண்ட்விச்சை சாப்பிட்டு விட்டு, ஓய்வு எடுக்கப்போனவர், கொஞ்ச நேரத்தில் போய் சேர்ந்துவிட்டார்.

தாம்சனின் அகால மரணம் அனைவரையும் உலுக்கிவிட்டது. என்ன ஆயிற்று அவருக்கு?. மருத்துவ ரிப்போர்ட்டில், இருதயக்கோளாறு தான் மரணத்திற்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அளவுக்கு அதிகமாக இருதயம் வீங்கியிருந்தது. தாம்சனின் அம்மாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. தாம்சனுக்கு இருதயக்கோளாறு எதுவும் இல்லை.

மாண்டவர் மீண்டுவருவதில்லையே !. அழுது அரற்றிய லின்னுக்கு கிடைத்த, தாம்சனின் இன்சூரன்ஸ் தொகையான 35,000 டாலர், இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கு போதுமா ?. அதிலும் ஒரு பெரிய சோகம். 2 லட்சம் டாலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்த தாம்சன், 15 நாட்களுக்கு முன், தவணையைக் கட்ட மறந்ததால், பாலிசி காலாவதியாகிவிட்டது. இறந்தும் தாம்சனுக்கு அதிர்ஷ்டமில்லை; முக்கியமாக லின்னுக்கும்.

2 வாரம் கழித்து, தாம்சனின் அம்மாவிற்கு, அடுத்த ஊரிலிருந்து ஒரு கடிதம் வந்தது.

6 வருடங்களுக்கு முன் ஜான் முதலில் வயிற்று வலியால் அவதிப்பட்டு, பின் சரியாகி, அடுத்த 2ஆம் நாள் மரணமடைந்தார். போஸ்ட்மார்டத்தில், தாறுமாறான இருதயத்துடிப்புதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஜானின் அம்மாவுக்கு சந்தேகம் இருந்தாலும், போலீசார், மேற்கொண்டு விசாரணை செய்யவில்லை.

சரி ! ஜானுக்கும், 2 வாரத்திற்கு முன் இறந்துபோன தாம்சனுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா ?. இருவரும் அரசாங்கப் பணியில் இருந்தவர்கள். இந்த ஒற்றுமையைத் தவிர இன்னொன்றும் இருக்கிறது. அது ! லின். 6 வருடங்களுக்கு முன் ஜானின் மனைவியாக இருந்தவள், லின்.

லின்னின் இரண்டு கணவர்களின் திடீர் மரணம் தற்செயலான ஒன்று என நம்பமுடியவில்லை. சிறு பொறியாக இருந்த சந்தேகம் லின்னைப் பற்றித் தெரிந்ததும், பற்றி எரியத்தொடங்கியது. தாம்சன் மற்றும் ஜானின் போஸ்ட்மார்டத்தில் கண்டறியப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு விஷயம்;  இருவரது கிட்னியிலும் இருந்த “கால்சியம் ஆக்ஸலேட்” என்று வஸ்து. ஆனால், இருவரது உடலிலும் எந்த ஒரு விஷமும் கண்டறியப்படவில்லை.


கால்சியம் ஆக்ஸலேட் உடலில் வருவதற்கு, எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol) என்ற ரசாயனப் பொருள் காரணம். தாம்சனின் பரிசோதனையில், எத்திலின் க்ளைக்காலின் அளவைப் பரிசோதிக்கையில் கணக்கில் சிறிய தவறு நேர்ந்திருந்தது. அதனை சரிசெய்தபின், தாம்சனின் உடலில் இருந்த 10 மடங்கு அதிக எத்திலின் க்ளைக்கால்தான், மரணத்திற்கு காரணம் என்று உறுதிசெய்ய்யப்பட்டது.

த்திலின் கிளைக்கால் என்பது, குளிரினால் வாகன எரிபொருள் உறையாமல் தடுக்க கலக்கப்படும் ஆண்டி ஃப்ரீஸ் என்ற ஒரு பொருள். புதைக்கப்பட்ட ஜானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு செய்யப்பட்ட பரிசோதனையில், உடலில், எத்திலின் க்ளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லின்னைப் பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிந்த உண்மைகள்:


  • தாம்சன் புதைக்கப்படும் நேரத்தில், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, தன் செல்போன் மூலம் மூன்று முறை தொடர்புகொண்டு, பாலிசி பணம் விரைவில் கிடைக்குமாறு லின் கேட்டிருக்கிறாள்.

  • தாம்சன் இறப்பதற்கு சில நாள் முன், பிராணிகள் காப்பகத்திற்குச் சென்று, பூனைகளைச் சாகடிக்க எந்த விஷத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்று லின் கேட்டிருக்கிறாள். சந்தேகம் கொண்டு, அந்தக் காப்பகத்தின் உரிமையாளர், விஷத்தின் பெயரைக் கூற மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, லின்னுக்கு வேறு வழியில்லாமல் போனது. ஜானை சாகடிக்க பயன்படுத்திய அதே “ஆண்டி ஃப்ரீஸ்”சையே உபயோக்கிக்க முடிவு செய்தாள்.

  • லின்னின் பேங்க் மேனேஜர், லின் கிட்டத்தட்ட 35,000 டாலர் கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்ததைத் தெரிவித்தார். தாம்சன் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன், லின் பேங்க்கிற்கு வந்து, கடனை 2 வாரங்களின் அடைப்பதாக உறுதியளித்திருந்தாள்.

  • லின்னின் கடன் வாங்கும் மற்றும் பணம் செலவழிக்கும் வேகம், இந்தியா, உலகவங்கியின் கடன் வாங்கும் வேகத்தைக் காட்டிலும் அதிகமானது. ஜான் இறப்பதற்கு முன், தன் நண்பர்களிடம், லின் செலவழிக்கும் வேகத்தைப் பற்றி புலம்பியிருக்கிறார்.

  • ஜான் இறந்ததும், இன்சூரன்ஸ் பணம் 1,50,000 டாலர் + மாதாந்திர பென்ஷன் தொகை 750 டாலர், லின்னுக்குக் கிடைத்திருக்கிறது. தாம்சன் இறப்பதற்கு முன் லின் மேல் சந்தேகமடைந்ததாலேயே, தன் 2 லட்சம் டாலர் பாலிசிக்கு தவணைக்கட்டாமல் இருந்திருக்கிறார். இது லின்னுக்குத் தெரியாமல் போனது, லின்னின் துரதிருஷ்டமே.

  • விசாரணையில் தெரியவந்த இன்னொன்று, தாம்சனை, லின் திருமணம் செய்யாமலே சேர்ந்துவாழ்ந்தது. அதற்குக் காரணம், தாம்சனை திருமணம் செய்துகொண்டால், ஜானின் பென்ஷன் தொகைக் கிடைக்காது என்பது.
எத்திலின் க்ளைகால் போன்ற ஒரு ரசாயனம் உணவில் கலந்திருந்தால், உண்பவருக்கு சுவை தெரியாமல் இருந்திருக்குமா ?. எத்திலின் க்ளைகாலை, எதாவது இனிப்பு உணவுடன் சேர்க்கும்போது, அதன் ரசாயன நாற்றம் தெரியாமல் போய்விடும். இந்த வழக்கு முடிந்த உடன், அரசாங்கம், எத்திலின் க்ளைகாலில் கசப்புச் சுவையை சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டது. (நம் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும்  மண்ணென்ணையில், நீல நிறம் கலப்பது போல).

லின் - இவ்வளவு சின்ன பெயரை வைத்துக்கொண்டு செய்த குற்றமோ மிகப்பெரியது. அதற்குப் பரிசு, இரண்டு ஆயுள் தண்டனை. லின்னின் பெயர் உலகத்தின் மிகப்பெரிய வில்லிகளின் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்தது.

27 August 2010

தரமாட்டேன்



காலை வந்த வார இதழை
எடுத்துவைத்து
விளையாட்டு காட்டும் மகன்.

காட்பரீஸ் சாக்லேட்,
சிறுத்தைப் பட நோட்டு,
கலர் பென்சில்,
எதற்கும் மசியாமல்,
”தரமாட்டேன் போப்பா !”
என்பதே பதில்.

ள்ளிக்குப் போனபின்
கேட்பாரற்றுக் கிடக்கும்
புத்தகத்தை எடுக்க
ஏனோ மனமில்லை.

21 August 2010

ஹைக்கூ


09 August 2010

வலைச்சரம் - முதல் நாள்

நண்பர்களே,
இன்று (9-ஆகஸ்டு-2010) முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை (15-ஆகஸ்டு-2010) வரை, வலைச்சரம் வலைத்தள, ஆசிரியர் பொறுப்பை, சீனா சார் அளித்திருக்கிறார். அங்கு வந்து, பதிவுகளைப் படித்து, தங்களின் மேலான கருத்துக்களை, பின்னூட்டமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


30 July 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் ? - ஆச்சரியமூட்டும் தகவல்கள்

”ப்ளீஸ்ப்பா !! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க”, ன்னு கேட்குற மாதிரி இந்த தொடர் அழைப்புக்காக காத்திருந்தேன். ப்ரியமுடன் வசந்த் அழைத்துவிட்டார். மிக்க நன்றி. வாங்க பதிவுக்குள் செல்லலாம்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பின்னோக்கி


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் *****. என்னது ? ஒரே * ஆ தெரியுதா ?. அப்ப நீங்க ஒழுங்கா இன்கம்டாக்ஸ், இந்த வருஷம் அல்லது எந்த வருஷமும் கட்டலைன்னு தெரியுது. ஒழுங்கா கட்டுனவங்களுக்கு இது * ஆ தெரியாது. இப்ப சொல்லுங்க, என் உண்மையான பெயர் தெரியுதா ? தெரியலையா ?. தெரியலைன்னு சொல்றவங்க, அவங்களோட முழு விலாசத்தையும் எனக்கு அனுப்பி வைங்க. ஹலோ... இதுக்கெல்லாம் மிரண்டு போய், பதிவ படிக்காம போய்டாதீங்க..

சின்ன வயசு அனுபவங்களைப் பத்தி எழுத வேண்டும்னு தோணுச்சு. அதுனால பின்னோக்கின்னு பெயர் வெச்சுக்கிட்டேன். இப்ப, ரோடுல போனா, எல்லாரும் பின்னோக்கி !! பின்னோக்கின்னு ரொம்ப பாசமா கூப்பிடுறாங்க (பின்னாடி பார்த்து வண்டி ஓட்டாத ! முன்னாடி பார்த்து ஓட்டுன்னு திட்டுறாங்கன்னு, யாரும் பின்னூட்டம்... அட ! பாருங்க இதக் கூட பின்னூட்டம்னுதான் சொல்றோம். முன்னூட்டம்னு சொல்றதில்லை.) போதும் என் பெயர்க்காரணம்னு நினைக்கிறேன். நெக்ஸ்ட் கொஸ்டியன் ப்ளீஸ் !!


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ம்ம்.. அது ஒரு பெரிய கதை. ஒரு டவுட்டு. எதுக்கு எல்லாரும் உண்மைய சொல்றத்துக்கு முன்னாடி அத கதைன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க ?.  சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் பையனுக்கு ஸ்கூல்ல, தமிழ் கட்டுரை எழுத சொன்னாங்க. தமிழ்ல டைப் பண்றத்துக்கு nhm writer டவுன்லோடு பண்ணி, டைப்படிக்க கத்துக்கிட்டு, அப்புறமா ஏன் நம்மோட எண்ணங்களை, எல்லாருக்கும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். எழுத ஆரம்பிச்சேன். அப்ப ஆரம்பிச்சது இந்தப் பயணம். (யார் அங்க ?? டிக்கெட் வாங்கியாச்சான்னு கேட்குறது ?)



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

முதல் பதிவு போட்ட உடனே, தமிழ்மணத்துல சேர்த்தேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, தமிழிஸ்ல சேர்த்தேன். யாரும் இல்லாத கடைக்கு டீ ஆத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா. நாம ஒரு பதிவு எழுதி, அத நாம மட்டுமே படிக்குறது ரொம்பக் கொடுமைங்க. அப்புறம் என் ஆபீஸ்ல இருக்குறவங்கள மிரட்டி என் பதிவ படிக்க வெச்சேன். கொஞ்ச நாள் கழிச்சு, எல்லாரும் என்கிட்ட பேசவே பயந்தாங்க. எங்க ! பேசுறத எல்லாம் எடுத்து பதிவா போட்டுடப்போறானோன்னு.

ரொம்ப பிரபலமான உடனே, கொஞ்சம் நாள் முன்னாடி ஞானோதயம் (யாரால ? என்னது ! நித்தின்னு யாரோ சொல்ற மாதிரி இருக்கே. அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க) வந்தது. இப்ப பேஜ் கவுண்டர்ர என் ப்ளாக்குல இருந்து எடுத்துட்டேன். (ஏய் ! ரொம்ப நடிக்காத, இப்பத்தான் ப்ளாக்கர்லயே எத்தனைப் பேர் வந்தார்கள் ! சென்றார்கள்னு குடுக்குறாங்களே..) சே..இந்த மனசாட்சியோட தொல்லைத் தாங்கலை. அப்ப அப்ப வந்து தொல்லைக் குடுக்குது.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஒரு பத்து பதிவு தவிர, மத்ததெல்லாம், சொந்த விஷயம் தான். வேற யோசிச்சு எழுத அளவுக்கு சரக்கு இல்லைங்க. வீட்டுல திட்டுவாங்க, எல்லாத்தையும் எழுதறீங்களேன்னு. நண்பர்கள் என்னையப் பார்த்தாலே தெரிச்சு ஓடுறாங்க. பேச பயப்படுறாங்க. மொத்தத்துல ஒரு டெரர்ர பார்க்குறமாதிரி பார்க்குறாங்க. இது தாங்க பக்க விளைவு.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என்னது ?? எழுதறத்துக்கு காசு குடுக்குறாங்களா ?.  நான் எழுதறதயெல்லாம் படிக்குறத்துக்கு, படிக்குறவங்களுக்கு காசு குடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எழுதறாதல, நாலு பேரு ஓட்டு போடுறாங்க. நல்லா எழுதறன்னு சொல்றாங்க. எல்லா மனசும் ஒரு சின்ன பாராட்டுக்குத்தான் ஏங்கிக்கிட்டு இருக்குன்னு விமல் சொன்னார் இல்லையா ? அதுக்காகத்தான் எழுதறது.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ஒன்று மட்டுமே. இதுல எழுதவே, மேட்டர் எதுவும் சிக்க மாட்டேங்குதுங்க.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் வந்ததில்லைங்க. பொறாமை வந்துருக்கு. கொஞ்சம் வயித்தெரிச்சல் கூடப் பட்டிருக்கேன். அந்த லிஸ்ட் கீழே...



ஒரு ஐடியா கிடைச்சாலே அத ஒரு பதிவா போட்டுடுவேன். ஆனா இவரு, ஒரே பதிவுல 10 ஐடியா எழுதுறாரு. ரூம் போட்டு யோசிக்கிறாருன்னு நினைக்கிறேன்.






10 வரி யோசிச்சு எழுதறத்துக்குள்ள நாக்குத் தள்ளிடுது. இவரு, எழுத ஆரம்பிச்சாருன்னா, கதையாக் கொட்டுது.




இப்பல்லாம், மனசுல கவிதையாக் கொட்டுது. ஆனா, அந்த எழுத்துதான், வார்த்தை சிக்க மாட்டேங்குது. இவங்களுக்கு மட்டும் எங்க இருந்து வார்த்தை சிக்குதுன்னு தெரியலை.








வயசு ஏற ஏற அனுபவம் கூடும்னு சொல்லுவாங்க. எனக்கு அப்படி எதுவும் இதுவரை தெரியலை. ஆனா, இவரு வாழ்க்கையில பார்த்த மக்கள் எத்தனை பேரு பாருங்க. (இவருக்கு ரொம்ப கூச்ச சுபாவம். அதுனால, அவரோட போட்டோவ போடலை)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


தொடர்புகொண்டு பாராட்டுனது இல்லை. ஆனா, முதல்ல பின்னூட்டமிட்டவங்க ஈஸ்வரி. அவங்களுக்கு ரொம்ப நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இது நல்லக் கதையா இருக்கே. இங்கயே எல்லாத்தையும் சொல்லிட்டா, அப்புறம் பதிவு எப்படி போடுறது ?. அதுனால, தினமும் வந்து, என் பதிவ படிங்க. அதுல பதிவுலகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை சொல்றேன்.

28 July 2010

தொங்கு பாலத்தின் நடுவில் ...

ராசரியாக ஒரு இந்தியனின் ஆயுட்காலம் 65 முதல் 70 வருடம் என்றால், அதில் பாதி வயதில் இப்பொழுது இருக்கிறேன்.

வாழ்க்கை என்ற, 65 பலகைகளால் கட்டப்பட்ட தொங்கு பாலத்தின் பாதியைக் கடந்த உணர்வு. . இங்கிருந்து நடந்து வந்த பாலத்தை திரும்பிப் பார்க்கும் போது, முதல் 15 அடிகள் மிக எளிதாக, மனதில் பயம் என்பதே தெரியாமல் கடந்திருக்கிறேன்.

டந்து வந்த போது, இரண்டு புறமும் இருந்த கயிற்றை பிடிமானத்திற்காகக் கூட தொடாமல் சர்வ சாதாரணமாக வந்து விட்டேன். அங்கிருந்த போது காலின் அருகிலேயே தரையிருந்தது. விழுந்தாலும் அடி படாது என்ற உணர்வு. அதனால், கீழே பார்க்காமல், இருமருங்கிலும் இருந்த இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி வந்தாகிவிட்டது.

20வது அடியை வைக்கும்போது பாலம் சிறிது ஆட ஆரம்பித்தது. காலின் கீழே சில பலகைகள் உதிர்ந்து விழுந்த போது, முதன் முதலில் பயமும் கவலையும் வந்தது. கடக்கும் பாதையின் முக்கியத்துவமும், அதில் இருக்கும் ஆபத்தும், சவால்களும் புரிய ஆரம்பித்தது.


24வது அடியில், பிடிமானத்திற்கு இருந்த கயிறு வழுவிழந்து அறுந்த போது,  சுற்றி பாதுகாப்புக்காக எதுவும் இன்றி தனியே நிற்கும் உணர்வு. இனி என் வாழ்வு என் நடவடிக்கைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்ற பொறுப்புணர்ச்சி வந்தது.

27-28 வது அடியில், கைப்பிடித்து அழைத்துச் செல்ல ஒருவர், தோளில் சுமந்து இன்னொருவர் என்று மேலும் இரண்டு நபர்கள் என் வாழ்வில். அவர்களுக்கு நான் பிடிமானமா ? இல்லை எனக்கு அவர்களா ?. தெரியவில்லை. ஆனால் புது உற்சாகமும், நம்பிக்கையும் வந்தது.

லையில் சிறுபான்மையாக இருந்த வெள்ளை முடி, அதிக இடங்களைப் பிடித்து பெரும்பான்மையாக மாறத் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் தாமதாக வந்தாலும், நானும் இருக்கிறேன் என்று தாடையிலும் சில வெள்ளை முடிகள்.

ப்பாவின் தொப்பையைத் தொட்டு விளையாடின அந்த நாட்களின் நியாபகம் மறுபடியும். ஒரு மாற்றம்; அப்பாவின் தொப்பைக்கு பதிலாக என்னுடையது தொட்டு விளையாடும் என் பையன்.

”நாமெல்லாம் இப்படியா இருந்தோம் ?”
”நாங்க எல்லாம் படிக்கும் போது ....”
”சின்ன வயசுல நான் ....”
”உலகம் ரொம்ப மாறிடுச்சுல்ல ....”
போன்ற வரிகள் அடிக்கடி பேச்சில் இடம் பிடிக்கத்தொடங்கியிருக்கிறது.

“நீ பெரியவனான உடனே, என்னைப் பார்த்துக்குவியா ?" என்ற அசட்டுத்தனமான கேள்வியை, 6 வயது மகனிடம் கேட்கக்கூடாது என்று மனதினுள் வைக்கிறேன். வரும் வருடங்களில் வாய்விட்டு அவனிடம் கேட்டுவிடுவேனோ என்று தோன்றுகிறது.

கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா எழுதிய “70 வயது பிறந்த நாள் அனுபவங்கள்” படித்தவுடன், அவர் சொன்ன ஒரு சில விஷயங்கள் 35 வயதிலேயே நடப்பதைக் கண்டு அதிசயமாக இருக்கிறது. முக்கியமாக அந்த ரம்யா கிருஷ்ணன் விஷயம்.

இது வரை எடுத்த தவறான முடிவுகளைத் திருத்திக் கொள்ள அவகாசம் அதிகமாக இருந்தது. இனி எடுக்கும் முடிவுகள் சரியானவைகளாக எடுக்கப்பட வேண்டும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

தொங்கு பாலத்தின் மீதியையும் சுகமாகக் கடக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

( ***** )

மேலே சொன்ன மாதிரி ஃபீலிங்கோட எழுதலாம். இல்லைன்னா, இன்னைக்கு எனக்கு பிறந்த நாளுன்னு சிம்பிளா சொல்லிடலாம். வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றிகள்.

25 July 2010

கனவே கலையாதே

சென்னை - மிக அழகான, அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு நகரம். இதன் சிறப்பு, இங்கு நிலவும் வெப்ப நிலை. குளிர்காலத்தில் 15 டிகிரியாகவும், வெயில் காலத்தில் 28 டிகிரியாகவும் இருக்கிறது.

குண்டு குழியில்லாத சாலைகள்; கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து; குறைந்த மக்கள்தொகை என்று இந்தியாவிலேயே முதன்மையான, வாழத்தக்க நகரமாகத் திகழ்கிறது.

( **** )

நேற்று நடந்த தேர்தலில் சுமார் 98 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்தியாவின் அடுத்த பிரதமராக ******** தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் தொகுதியில், இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

( **** )

கடந்த ஆண்டு, இந்தியாவிலேயே அதிக வருமான வரி கட்டியவர் தொழிலதிபர் பின்னோக்கி. தன் வருமானத்தின் பெரும்பகுதியை அறக்கட்டளையின் மூலம் ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காக செலவழிக்கிறார்.

( ****** )

இப்படியெல்லாம் மனசுல தோணுச்சுன்னா, அதுக்கு பேருதாங்க கனவு.

தூங்கும் போது மட்டும் கனவு காண்றவன் சோம்பேறி. முழிச்சுக்கிட்டும் கனவு காணுறவன் தான், தலைவன் - எப்படி இருக்கு இந்த பன்ச் டயலாக் ?

கனவு வேட்டை படம் பார்த்ததால, கனவ பத்தி எழுதலைங்க. CHELLA நாய்குட்டி தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தாங்க.  அதுனால தான் இந்தப் பதிவு.

”பரிட்சையில கொஸ்டியன் பேப்பர் குடுத்துடுவாங்க. நானும் பேனாவ எடுத்து பதில் எழுத ஆரம்பிச்சா - கடவுளே !! எழுதவே வராது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகியும், ஒரு வரி கூட எழுதியிருக்க மாட்டேன். சூப்ரவைஸ்சர், இன்னும் 10 நிமிஷம் தான் நேரமிருக்குன்னு சொல்லுவாரு. எனக்கு படபடப்பா இருக்கும்” - அந்த நிமிஷத்துல முழிப்பு வரும். ஸ்ஸ்.. கனவு !!!. பெரும்பாலும் இந்தக் கனவு, பரிட்சை முடிஞ்சு 2 அல்லது 3 நாட்களுக்கு அப்புறம் தான் வரும். என்னக் காரணம்னு தெரியலை.

நமக்கு புடிச்ச மாதிரி ஒரு சம்பவம் கனவா வரணும்னா, தூக்கம் வர்றத்துக்கு முன்னாடி, அதாவது, மூளை தூக்கத்த தொடங்குறத்துக்கு முன்னாடி உள்ள நிலையில அந்த சம்பவத்தை நினைக்க வேண்டுமாம். கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, கரெக்ட்டா மூளை தூங்கத் தொடங்குற நேரத்துல எப்படி நினைக்குறதுன்ற டெக்னிக் யாருக்காவது தெரியுமா ? தெரிஞ்சா சொல்லுங்க.

மத்தபடி, நிறைவேறாத ஆசைகள் தான் கனவா வருதுன்னு சில பேரும், கனவு என்பது உணர்ச்சிகளின் வடிகால்னு சில பேரும் ( இப்ப நீ என்ன சொல்ற சண்முகமணின்னு சுந்தரகாண்டம் பட டயலாக் மாதிரி கேட்காதீங்க) சொல்றாங்க.

ஒவ்வோரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் இருக்காம். கனவு ஜோசியம்னு பெரிய சைஸ் புஸ்தகம் எல்லாம் இருக்கு. நேரம் இருந்தா படிச்சு பாருங்க.

கனவு காணுங்கள் !!

24 July 2010

ஆண்களுக்கு நீலம் ! பெண்களுக்கு ?

பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விருப்பமான நிறம் என்ன ? என்று ஒரு உலகளாவிய அளவில் ஆராய்ச்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள், வெவ்வேறு நாட்டிலிருந்து கலந்து கொண்டனர்.

முடிவில் பெரும்பான்மையான ஆண்களுக்கு நீலம் மற்றும் அதனைச்சார்ந்த நிறங்களும் பிடித்தமானவையாக இருந்தது. பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறம்.


இந்த முடிவின் அடிப்படையில், பல நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு பொருட்களின் நிறத்தை முடிவு செய்தனர்.

எப்படி உலகம் முழுவதும் இப்படி நிறத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயான ஒற்றுமை ?. பதில்.பரிணாம வளர்ச்சியில் இருந்தது.

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில், ஆண்களுக்கு வேட்டையாடுதலும், பெண்களுக்கு குழந்தைகளை பேணும் கடமையும் இருந்தது. வேட்டையாட நல்ல காலநிலை அவசியம். அதனால், கருமையான மழை மேகங்கள் இல்லாத நீல வானம், அவனுக்குப் பிடித்த மற்றும் அவசியமான ஒன்றாக இருந்தது.

பெண்கள், உணவுத்தேவைகளுக்காக, நன்றாக பழுத்த சிவப்பு நிற பழங்களை சேகரிப்பதில் ஈடுபட்டனர். இந்த இரண்டு நிறங்களும் வாழ்வியல் சார்ந்த நிறங்களாக, மரபணுக்களில் பதிந்தது.  அது இன்றும் தொடர்கிறது.

எனக்குப் பிடித்த நிறம் நீலம். சட்டையில் இருந்து கார் வரை இந்த நிறத்தையே தேர்ந்தெடுப்பேன்.

உங்களுக்குப் பிடித்த நிறம் எது ?

நன்றி: இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்ட, காபி குடிப்போர் சங்கப் பிரதிநிதிகளுக்கு.

22 July 2010

மூழ்கிப் பார்க்கப் போறாங்க

கி.பி 2010

தமிழ் செம்மொழி மாநாடு முடிந்ததும், இன்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள துறைமுக நகரான பூம்புகார் அல்லது காவேரிபூம்பட்டினம், கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதால், அதனை ஆராய்ந்து, புதைந்து கிடக்கும் பழங்காலப் பொருட்களை வெளியே எடுத்து வர திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.


கோவாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனமும் இந்தப் பணியை மேற்கொள்ள இருக்கிறது. மாமல்லபுரம் மற்றும் துவாரகை போன்ற இடங்களில், கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொண்டதில் இந்த நிறுவனங்களுக்கு அனுபவம் இருக்கிறது.





ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், சோழர்கள் காலத்தில், பூம்புகார் நகரம், கடல் கொந்தளிப்பால் (சுனாமி ?) கடலுக்கடியில் சென்று விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 




கி.பி 2200

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம், கடலுக்கு அடியில் காணாமல் போன, சேது சமுத்திரக் கால்வாய் (??? !!!) கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. சற்றே ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன் இந்தக் கால்வாய் கடலில் தோண்டப்பட்டது. காலப்போக்கில், அது கடலுக்கு மிக ஆழத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

17 July 2010

சில சுவாரஸ்யங்கள் - களவாணி

திரைப்படம் வெற்றியடைய கதை மிக முக்கியமானது என்ற பொதுவான கருத்தை பல படங்கள் பொய்யாக்கியிருக்கிறது. அப்பாவைக் கொன்ற வில்லன்களைக் கொல்லும் மகன் - ’அபூர்வ சகோதரர்கள்’. எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணைக் காதலிக்க விரும்பும் இளைஞர்கள் - ’இன்று போய் நாளை வா'. இந்த வரிசையில் பருத்திவீரன் கதையை கொஞ்சம் சிரிப்புடன் சொல்லியிருக்கும் - களவாணி.

இனி புதிதாக சொல்ல எந்தக் கதையும் உலகில் இல்லை. அதனால் புதிய கதை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டு, திரைக்கதையில் வித்தியாசத்தைக் காட்டி நிறைய தமிழ் படங்கள் வெற்றியடைவது நல்லது.

சில படங்கள் மட்டுமே பார்த்த உடன், அடுத்த நாளே மறுமுறை பார்த்திருக்கிறேன். நாயகன், சின்னத்தாயி, கதாநாயகன், ஆட்டோகிராஃப் மற்றும் பசங்க. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தாராளமாக சேர்க்கலாம்.


சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படம் முழுவதும் இருக்கிறது.


படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில், ”கட்டிக்கிறேன்னு சொல்லு” என்று கதாநாயகன் அந்த சின்ன பெண்ணிடம் வற்புறுத்தும் போது, சிணுங்கிக்கொண்டே சொல்லும் அந்தப் பெண்ணின் முகபாவனை.

நொந்து போய் உட்கார்ந்திருக்கும் இளவரசுவிடம், ”ஏய்யா ! வெளிநாட்டுல இருந்து வந்திருக்கன்னு சொன்னாங்க. நல்லாயிருக்கியா ?. என்ன கோடாலி தைலமா கொண்டு வந்த ?” என்று ஒரு கிழவி கேட்க, அப்பொழுது அவரது முகபாவனை.

டிராஃபிக் கான்ஸ்டபிளிடமே, கிரிக்கெட் பந்தயத்திற்கு நன்கொடை வசூலிப்பது.

பாஸ்போர்ட் எடுக்க மகன் பணம் கேட்க, அப்பா தர மறுக்க, சரண்யா “சரிடா, இந்த தாலி 7 பவுன். அத அடகு வெச்சு பணம் வாங்கிக்க” என்று சொல்லும் போது, பதைபதைப்புடன் “வேண்டாண்டி. கொண்டு போய் வித்துடுவாண்டி” என்று புலம்பும் இளவரசு.


அண்ணே ! குடத்துல தண்ணி கொண்டு வந்து கை வலிக்குது” என்று சொல்லும் தங்கையிடம், “எங்க போற ? போ ! போ ! நாலு குடத்த கொண்டு வந்து வெயிட்டிங்ல போடு” என்று அலட்சியமாக சொல்லும் கதாநாயகன்.

பிரைவேட்ல வெச்சுருக்குற நகைய எடுத்து சொசைட்டியில வெச்சுடணும். ஒரு நல்ல நேரம் வந்து கடன தள்ளுபடி பண்ணிட்டா நல்லாயிருக்கும்” என்று மாடு வண்டியில் அமர்ந்து வரும் அந்த பெண்கள் பேசுவது.

செல்போனில் சிக்னல் சரியாக கிடைக்காததால், கதாநாயகன் மாட்டு வண்டியை விட்டு இறங்க, மாடு வயல்வெளியை நோக்கி போக, அடுத்த முறை செல்போனில் கால் வரும் போது, ”ஏண்டி மறுபடியும் குதிச்சுடப் போறாண்டி... அய்யயோ, குதிச்சுட்டாண்டி” என்று மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்கள் அலறுவது.


உங்க வீட்டு விசேஷத்துல எல்லாம் வந்து வேலை செஞ்சுருக்கேன். என் வீட்டு விசேஷத்துல நல்லா வேலை செய்யுங்க” என்று சரண்யா, தன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருப்பவர்களிடம் சொல்வது.

இத்தனை பேர் நிக்கிறோமே, யார்கிட்ட வந்து நிக்குறா பார்த்தீங்களா” என்று, கதாநாயகி சரண்யாவிடம் வந்து நிற்கும் போது கூட்டதிலிருக்கும் பெண்கள் சொல்வது.

எனக்கு சேலையா எடுத்துக் குடுத்த ?” என்று கேட்கும் கிழவியிடம்,
ஆத்தா ! என் மகன் கல்யாணத்துக்கு எடுத்துக் குடுக்குறேன்” என்று இளவரசு சொல்லி முடிப்பதற்குள்,”அப்பா ! அண்ணன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வாசல்ல வந்து நிக்குதுப்பா” என்று அவரது மகள் ஓடிவந்து சொல்வது.

இதோ ! சண்டை வரப்போகுது. அருவாள எடுத்துக்கிட்டு, நாக்கை கடிச்சுகிட்டு சண்டை போடப்போறாங்க என்று நினைக்கும் போது, அந்தக் காட்சி, காமெடியாய் முடிவது.

இந்தப் படத்தில், மிக இயல்பான நடிப்பில் முதலில் இருப்பவர் இளவரசு. தவமாய் தவமிருந்து படத்தை விட, அருமையாக செய்திருக்கிறார்.

 ”பசங்க” படத்தை அடுத்து எல்லாரும் பார்க்கக்கூடிய படம் இது.

16 July 2010

கேட்ட நியாபகம் இருக்கிறதா ?

வாசனை மற்றும் இசை. இவை இரண்டிற்கும், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை, நியாகப்படுத்தும் ஆற்றல் உண்டு. இங்கே நாம் என்றோ கேட்ட சில இசைக்கோர்வைகளை தந்திருக்கிறேன். முதலில் இவைகளைக் கேட்டு பழைய நினைவுகளில் மூழ்குங்கள். பிறகு அது எந்த படம்/நாடகம்/தொலைக்காட்சியில் பார்த்தது என்று கண்டுபிடியுங்கள். (கேட்பதற்கு முன் உங்கள் கணினியின் சப்தத்தைக் குறைத்துக் கொள்ளவும்).

முதலாவது,

நான் சிறுவயதில் மிகவும் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சியின் துவக்கத்தில் வரும் இசை இது. அமைதியான இரவு நேரத்தில்இதனைக் கேட்கும் போது, மனது ஒரு சிறு ஊரையும் அதனையொற்றிய வாழ்வியலையும் நினைவுபடுத்தும்.

||


இரண்டாவது,

இது ஒரு தொலைக்காட்சித் தொடரின் பாடலின் இசை. இதனைக் கேட்கும் போது, சிறு பய உணர்ச்சியத் தூண்டக்கூடியது. கூடவே தாளம் போட வைக்கும் துள்ளலான மெட்டு. கேளுங்கள்.

||


மூன்றாவது,

காலை 6 மணியே விடியல் காலை என்று எண்ணிய சிறு வயதில், இந்த பாட்டுச் சத்தம் கேட்டபடி, கண்ணைக் கசக்கியபடி படுக்கையை விட்டு எழுந்தது நினைவிலிருக்கிறது. சில நேரங்களில் சீக்கிரம் எழுந்திருக்கவில்லை என திட்டு விழும்.

| |

நான்காவதாக,

Earth TV யில் உலகின் முக்கியமான நகரங்களின் தற்போதைய நேரம் மற்றும் வெப்ப நிலை, அந்தந்த நகரங்களின் முக்கியமான இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் கேமிரா மூலமாக காண்பிக்கப்படும். CNBC TV-18 தொலைக்காட்சியில் அதனை ஒளிபரப்பும் போது, அதன் பின்ணனியில் ஒலிக்கும் இசையும், உலகின் வெவ்வேறு இடங்களின் காட்சிகளும் மனதிற்கு இதமாக இருக்கும். எவ்வளவு தேடியும், அது எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் இங்கு பகிர இயலவில்லை.

30 June 2010

உங்களுக்கு பதில் தெரியுமா ?

ஒரு சிறிய அறை. ஒரு கம்பெனியில் சேருவதற்காக கடைசி கட்டத் தேர்வில், 8 பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில விதிமுறைகளை விளக்குவதற்கு ஒருவர் அறையினுள் வருகிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இங்க பாருங்க மக்களே ! உங்களுக்கு முன் ஒரு கொஸ்டியன் பேப்பர் இருக்கு. அதற்கு விடையளிக்க 80 நிமிடங்கள் தரப்படும். 80 நிமிடங்களுக்கு முன், யாராவது இந்த அறையை விட்டு வெளியே போனா, அவங்க அப்படியே வீட்டுக்குப் போய்ட வேண்டியது தான். எந்தக் காரணத்தைக் கொண்டும், கொஸ்டியன் பேப்பரை டேமேஜ் செய்யக் கூடாது. தெரியாம பண்ணிட்டேன். தண்ணிக் கொட்டிடுச்சுன்னு சொன்னாலும், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்தக் காரணம் கொண்டும் என்னோட நீங்க பேச முயற்சி பண்ணக்கூடாது. இந்த ரூம்ல ஒரு காவல்காரன் நிக்கிறான் பாருங்க. அவன் கூடவும் நீங்க பேசக்கூடாது. எதாவது கேள்வியிருக்கா உங்ககிட்ட ?”




இவ்வளவு பேசிய பிறகு, அந்த அறையில் இருந்த யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 80 நிமிடத்திற்காக கடிகாரம் தொடங்கப்படுகிறது. ரூல்ஸ் சொன்ன அந்த ஆள், அறையை விட்டு வெளியே போய்விடுகிறான்.

எல்லாரும் அவர்களின் கொஸ்டியன் பேப்பரைப் பார்க்கிறார்கள். அடக் கடவுளே !! ஒன்றுமே இல்லை. வெற்றுத்தாளாக இருக்கிறது. அப்புறம் எப்படி அந்தக் கேள்வியைக் கண்டுபிடிக்கிறார்கள் ? யாராவது விடை கொடுத்தார்களா ?

இப்படி ஒரு டெஸ்ட் வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? இதனை ஒரு படமாக எடுத்திருக்கிறார்கள்.



படத்தின் பெயர் - EXAM

வெளியான ஆண்டு - 2009.
சுவாரஸ்யமான இந்தப்படம் சரியாக 90 நிமிடங்கள் ஓடுகிறது. ஒரே ஒருவர், என்ன கேள்வி என்று கண்டுபிடிக்கிறார். அதுவும் 79 நிமிடங்கள் 50 வது நொடியில். அந்தக் கேள்வியைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்கிறார்கள் ? எத்தனை பேர் அறையை விட்டு வெளியே போகிறார்கள் ?. இவ்வளவு கடினமான ஒரு தேர்வு எதற்காக ? அந்தக் கம்பெனி என்ன தயாரிக்கிறது?.

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது படம். ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட மிகவும் சுவாரஸியமான இந்தப் படத்தை நீங்களும் பாருங்கள்.

27 June 2010

மாறும் ரசனைகள் - தொலைநோக்கி

*--*---*----*
இது ஒரு தொடரில்லாத தொடர் பதிவு. இதன் மற்ற பாகங்களை இங்கு படிக்கலாம்.
*--*---*----*

கி.பி 1013ஆம் வருடம், ஒரு நாள் நள்ளிரவில், ராஜ ராஜ சோழன் உப்பரிகையிலிருந்து, வானத்தைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்கள் வித விதமான வடிவங்களில், பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவன் பார்த்த வானம் இதோ !!


ஆச்சரியமான விஷயம், ராஜ ராஜ சோழன் பார்த்த அதே நட்சத்திரக்கூட்டத்தை, நாமும் இன்று இரவு பார்க்கலாம். மனிதன் வாழ்வில் 1000 ஆண்டுகள் என்பது கற்பனை செய்ய முடியாத பெரிய காலம். ஆனால், பிரபஞ்சத்தில், 1000 ஆண்டுகள் என்பது சில விநாடிப் பொழுது போன்றது.

ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரையிருக்கும் குளிர்காலம் முடிந்து, வெயில் ஏற்படுத்தும் கசகசப்பு, புத்தகம் படிக்கும் பழக்கத்தை சற்றே நிறுத்த செய்யும். ஆற்காட்டார் புண்ணியத்தில் மொட்டை மாடி எங்கிருக்கிறது என்று நாம் தேடும் மே முதல் ஜீலை வரையிலான இந்த மூன்று மாதங்கள், வானத்தைப் பார்க்க சரியான காலம். மேகங்கள் அற்ற தெளிவான வானம் மற்றும் கோடைக் காலத்தில் எளிதில் பார்க்கக் கூடிய வியாழன் (Jupiter) மற்றும் அதன் துணைக்கோள்கள், சனி (Saturn), செவ்வாய் (Mars) மற்றும் அந்தி சாயும் வேளை மட்டுமே பார்க்கக்கூடிய வெள்ளி (Venus) போன்ற கிரகங்கள் தெளிவாகத் தெரிவது ஒரு காரணம்.

5 வருடங்களுக்கு முன், வெறும் கண்களால் விண்வெளியில் உலவும், ISS (International Space Station) மற்றும் இரிடியம் செயற்கைக்கோள்களை பார்க்க முடியும் என்று தெரிந்தது. கண்ணடிக்கும் வானத்து தேவதை என்ற பதிவில் அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். அன்று தொடங்கி வானவியலில் ஒரு ஈடுபாடு.

வெறும் கண்களை விடுத்து, பைனாகுலர் மூலம் நட்சத்திரக் கூட்டங்களையும், நிலவின் மேற்பரப்பையும் நன்றாக பார்க்கமுடியும் என்பதால் Celestron நிறுவனத்தின் 10x50 பைனாகுலர் வாங்கினேன். சிறிது நாட்கள் உபயோகித்த பிறகு, சுற்றுலா செல்லும் போது தொலைவிலுள்ளவற்றைப் பார்ப்பதற்கு மட்டுமே இந்த பைனாக்குலர் உதவும் என்பதை உணர்ந்தேன்.

கண்ணுக்குத் தெரியும், சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களைப் பார்க்க, தொலைநோக்கி கண்டிப்பாக வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்கு இணையதளங்கள் பலவற்றைப் படித்து, தொலைநோக்கிகளைப் பற்றி அறிந்து கொண்டேன். வெளிநாடுகளில் கிடைக்கும் Celestron நிறுவனத்தின் தொலைநோக்கிகள் பல அருமையானவை. ஆனால், அங்கிருந்து வாங்கிவரும் வசதியில்லாததால், இந்தியாவில் எங்கே கிடைக்கும் என்று தேடினேன். கடைசியாக, மும்பாயில் ஒரு நிறுவனத்திலிருந்து, இந்தத் தொலைநோக்கியை வாங்கினேன்.

இதைப் பார்த்தவர்கள் நிறைய பேர் சொன்னது “அடுத்த வீட்டு மொட்டை மாடிய பார்க்குறத்துக்கு எதுக்கு இவ்வளவு பெரிய டெலஸ்கோப் ?”. ”இல்லைங்க, அதுக்கு இல்லைங்க” என்று சொல்லி, சொல்லி சோர்ந்து போனேன். வாங்கிக் கொஞ்ச நாளிலேயே, ஒன்று தெரிந்து போனது. வாங்குவது எளிது. அதனை உபயோகிப்பது கடினம் என்று. அப்பொழுது ஆபத்பாந்தவனாய் வந்தவர், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீராம். எப்படி உபயோகிக்க வேண்டும், எந்த நேரத்தில் எந்த கோள்களைப் பார்க்க வேண்டும், Deep Sky Objects எனப்படும், தொலைதூர கேலக்ஸிகளை எப்படி பார்ப்பது என்று சொல்லிக்குடுத்தார்.முதன் முதலில், பார்ப்பதற்கு எளிதான, சந்திரன். அருகில்..மிக அருகில் அதன் பிரம்மாண்டம்  அசர வைத்தது. எல்லாரும் நினைப்பது போல பெளர்ணமி அன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது. அன்று வெளிச்சம் மிக அதிகமாக இருப்பதால், அதன் மேற்பரப்பு சரியாகத்தெரியாது. அமாவாசை முடிந்து அடுத்த 6வது நாளில் இருந்து 12ஆம் நாள் வரை பார்ப்பது எளிது. நான் எடுத்த ஒரு போட்டோ.



சென்னை போன்ற நகரத்தில் உள்ள பிரச்சினை - வெளிச்சம். மொட்டை மாடியில் சென்று பார்த்தால், அடிவானத்திலிருந்து 30 டிகிரி வரை வெளிச்சமே வியாப்பித்திருக்கும். நட்சத்திரங்கள், அந்த வெளிச்சத்துடன் போட்டியிட முடியாமல் மறைந்திருக்கும்.

வெளிநாடுகளில் வானவியலில் ஆர்வமுடையவர்களின் நலன் கருதி, ஒரு குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்படுகிறது (மேலும் விபரங்களுக்கு http://www.darkskiesawareness.org/ ). மற்ற நாட்களில், அவர்கள், நகரத்திலிருந்து தொலைதூரம் சென்று, வெளிச்சம் சிறிதுமற்ற இடங்களில் இரவு முழுவதும், Messier's Deep Sky Objects எனப்படுகிற 110, வெறும் கண்களால் பார்க்க இயலாத கேலக்ஸிகள், நெபுலாக்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கிறார்கள். இதனை ஒரு போட்டியாகவும் நடத்துகிறார்கள். அந்த Messier's Objects ல் சில இதோ (நன்றி: celestiamotherlode.net).
இரவு நேரத்தில், கடற்கரையில் நின்று, வானத்தைப் பார்த்தால், வெளிச்சமற்ற அந்த நேரத்தில், வழக்கமான நாட்களை விட எவ்வளவு நட்சத்திரங்களை நம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று பாருங்கள். நாம் வசிக்கும் பால்வீதி (MilkyWay Galaxy), வெளிச்சமற்ற இரவுகளில் மட்டுமே காண முடியும்.

நான் பார்த்த கோள்கள் மற்றும் கேலக்ஸிகளைப் பற்றி வரும் பதிவுகளில் ...

26 June 2010

ஜெயிக்குமா இந்த படங்கள் ?

அது ஒரு காலம் - எப்ப வரும் ரஹ்மான் இசையில் வரும் கேசட் என்று தினமும் கேசட் கடைகளில் தொந்தரவு செய்தது. அதே காலகட்டத்தில், மணிரத்தினம் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இரண்டு எதிர்பார்ப்பும் போய் பல வருடங்களாகி விட்டது (படமோ அல்லது இசையோ தரமிழந்துவிட்டது என்று பொருள் கொள்ளாதீர்கள்)

சில வருடங்களுக்கு முன் வந்த சிவாஜி, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே போல, இப்பொழுது ஆர்வத்தைக் கிளப்பியிருக்கும் இரண்டு படங்கள்.

மதராசபட்டினம் மற்றும் ஆனந்தபுரத்து வீடு.


மதராசபட்டினம் டிரெய்லர் அந்த கால சென்னையை கண்முன் நிறுத்தியது. பெரிய (தியேட்டர்) ஸ்கிரீனில் பார்க்கும் போது, கிராபிக்ஸ் என்று நன்றாக தெரியுமளவுக்கு கிராபிக்ஸ் இருக்காது என நம்புவோம். ரொம்ப நாள் கழித்து, அழகான வெளிநாட்டுப் பெண் நடித்திருக்கும் தமிழ் படம் (நாடோடித் தென்றல் படத்து வெளிநாட்டு நாயகி மாதிரி இல்லாதது பெரிய ஆறுதல்) என்று நினைக்கிறேன்.

ஆனந்தபுரத்து வீடு, ஷங்கர் தயாரிப்பு என்ற எதிர்பார்பை விட, “விடாது கருப்பு”, “வானத்து மனிதர்கள்” மற்றும் “ருத்திர வீணை” போன்ற (நிஜமான) மர்மத்தொடர்களை இயக்கிய நாகா அவர்களின் படம் என்பதனால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஜெயிக்கும் தமிழ் படங்கள் தேவையான இந்த நேரத்தில், இவை இரண்டும் வெற்றிபெறுமா என பார்ப்போம்.

எல்லாமே அம்மாதான்

வழக்கம் போல இதுவும் இன்று காலை, சாலையில் பார்த்தது தான். இந்த வண்டி, சிக்னலில் நிற்காமல் போனால், யாருக்கு அபராதம் விதிப்பார்கள் ?.  அல்லது இந்த வண்டிக்கு அபராதம் விதிக்கும் தைரியம் யாருக்காவது வருமா ?.

ஒரு காலத்தில் மத்திய அரசு, எலக்ரானிக் சிப் பொருத்திய நம்பர் ப்ளேட் எல்லா வண்டிக்கும் வைப்பதாக ஒரு திட்டம் இருந்தது. இப்பொழுதும் அது இருக்கிறதா என்று தெரியவில்லை.

50 லட்சம் ரூபாய் போட்டு கார் வாங்குபவர்கள் கூட, நம்பர் ப்ளேட் எழுதும் போது, கஞ்சத்தனமாக, மிகச்சிறிய, கண்ணுக்குத் தெரியாத வகையில் நம்பர் எழுதுகிறார்கள்.

நான் வண்டி ஓட்டும் போது, பின்னால் வரும் ஆம்புலன்ஸீக்கு வழிவிடுகிறேனோ இல்லையோ, கட்சிக்கொடி கட்டிய டாடா சுமோ, பஸ், குடிதண்ணீர் லாரி மற்றும் மஞ்சள் கலர் நம்பர் ப்ளேட் வண்டிகளுக்கு கண்டிப்பாக வழி விட்டுவிடுவேன். எதுக்கு வம்பு ?.

23 June 2010

எல்லாம் விளம்பரம்

இன்று காலை, சாலையில் பார்த்த ஒரு விளம்பரம்.



படத்தில் உள்ள விளம்பரத்தை சரியாக படிக்க முடியாதவர்களின் வசதிக்காக:

வேண்டியது வேண்டியவருக்கு வேண்டியபொழுது கிடைக்கும்.
வனத்திருப்பதி
புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
புன்னை நகர், (கச்சனா விளை இரயில் நிலையம் அருகில்), திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் - 628618
பக்தியுடன் வணங்கி வரவேற்கும் 
ஓட்டல் சரவண பவன்


சென்னை, வடபழனி முருகன் கோவிலுக்கு அருகில் இருக்கும் சரவணபவன் ஓட்டல் போல, இந்தக் கோவிலுக்கு அருகிலும் சரவணபவன் ஓட்டல்.