திரைப்படம் வெற்றியடைய கதை மிக முக்கியமானது என்ற பொதுவான கருத்தை பல படங்கள் பொய்யாக்கியிருக்கிறது. அப்பாவைக் கொன்ற வில்லன்களைக் கொல்லும் மகன் - ’அபூர்வ சகோதரர்கள்’. எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணைக் காதலிக்க விரும்பும் இளைஞர்கள் - ’இன்று போய் நாளை வா'. இந்த வரிசையில் பருத்திவீரன் கதையை கொஞ்சம் சிரிப்புடன் சொல்லியிருக்கும் - களவாணி.
இனி புதிதாக சொல்ல எந்தக் கதையும் உலகில் இல்லை. அதனால் புதிய கதை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டு, திரைக்கதையில் வித்தியாசத்தைக் காட்டி நிறைய தமிழ் படங்கள் வெற்றியடைவது நல்லது.
சில படங்கள் மட்டுமே பார்த்த உடன், அடுத்த நாளே மறுமுறை பார்த்திருக்கிறேன். நாயகன், சின்னத்தாயி, கதாநாயகன், ஆட்டோகிராஃப் மற்றும் பசங்க. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தாராளமாக சேர்க்கலாம்.
சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படம் முழுவதும் இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில், ”கட்டிக்கிறேன்னு சொல்லு” என்று கதாநாயகன் அந்த சின்ன பெண்ணிடம் வற்புறுத்தும் போது, சிணுங்கிக்கொண்டே சொல்லும் அந்தப் பெண்ணின் முகபாவனை.
நொந்து போய் உட்கார்ந்திருக்கும் இளவரசுவிடம், ”ஏய்யா ! வெளிநாட்டுல இருந்து வந்திருக்கன்னு சொன்னாங்க. நல்லாயிருக்கியா ?. என்ன கோடாலி தைலமா கொண்டு வந்த ?” என்று ஒரு கிழவி கேட்க, அப்பொழுது அவரது முகபாவனை.
டிராஃபிக் கான்ஸ்டபிளிடமே, கிரிக்கெட் பந்தயத்திற்கு நன்கொடை வசூலிப்பது.
பாஸ்போர்ட் எடுக்க மகன் பணம் கேட்க, அப்பா தர மறுக்க, சரண்யா “சரிடா, இந்த தாலி 7 பவுன். அத அடகு வெச்சு பணம் வாங்கிக்க” என்று சொல்லும் போது, பதைபதைப்புடன் “வேண்டாண்டி. கொண்டு போய் வித்துடுவாண்டி” என்று புலம்பும் இளவரசு.
”
அண்ணே ! குடத்துல தண்ணி கொண்டு வந்து கை வலிக்குது” என்று சொல்லும் தங்கையிடம், “
எங்க போற ? போ ! போ ! நாலு குடத்த கொண்டு வந்து வெயிட்டிங்ல போடு” என்று அலட்சியமாக சொல்லும் கதாநாயகன்.
“
பிரைவேட்ல வெச்சுருக்குற நகைய எடுத்து சொசைட்டியில வெச்சுடணும். ஒரு நல்ல நேரம் வந்து கடன தள்ளுபடி பண்ணிட்டா நல்லாயிருக்கும்” என்று மாடு வண்டியில் அமர்ந்து வரும் அந்த பெண்கள் பேசுவது.
செல்போனில் சிக்னல் சரியாக கிடைக்காததால், கதாநாயகன் மாட்டு வண்டியை விட்டு இறங்க, மாடு வயல்வெளியை நோக்கி போக, அடுத்த முறை செல்போனில் கால் வரும் போது, ”
ஏண்டி மறுபடியும் குதிச்சுடப் போறாண்டி... அய்யயோ, குதிச்சுட்டாண்டி” என்று மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்கள் அலறுவது.
“
உங்க வீட்டு விசேஷத்துல எல்லாம் வந்து வேலை செஞ்சுருக்கேன். என் வீட்டு விசேஷத்துல நல்லா வேலை செய்யுங்க” என்று சரண்யா, தன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருப்பவர்களிடம் சொல்வது.
”
இத்தனை பேர் நிக்கிறோமே, யார்கிட்ட வந்து நிக்குறா பார்த்தீங்களா” என்று, கதாநாயகி சரண்யாவிடம் வந்து நிற்கும் போது கூட்டதிலிருக்கும் பெண்கள் சொல்வது.
“
எனக்கு சேலையா எடுத்துக் குடுத்த ?” என்று கேட்கும் கிழவியிடம்,
“
ஆத்தா ! என் மகன் கல்யாணத்துக்கு எடுத்துக் குடுக்குறேன்” என்று இளவரசு சொல்லி முடிப்பதற்குள்,”
அப்பா ! அண்ணன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வாசல்ல வந்து நிக்குதுப்பா” என்று அவரது மகள் ஓடிவந்து சொல்வது.
இதோ ! சண்டை வரப்போகுது. அருவாள எடுத்துக்கிட்டு, நாக்கை கடிச்சுகிட்டு சண்டை போடப்போறாங்க என்று நினைக்கும் போது, அந்தக் காட்சி, காமெடியாய் முடிவது.
இந்தப் படத்தில், மிக இயல்பான நடிப்பில் முதலில் இருப்பவர் இளவரசு. தவமாய் தவமிருந்து படத்தை விட, அருமையாக செய்திருக்கிறார்.
”பசங்க” படத்தை அடுத்து எல்லாரும் பார்க்கக்கூடிய படம் இது.